“மும்பை டீம்ல எனக்காக இவங்க ரெண்டு பேர் இருக்காங்க.. மறக்க முடியாத மாதிரி பண்ணுவேன்” – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
328
Hardik

2008 ஆம் ஆண்டு முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் முதன்மை வீரராக விளையாடிய காரணத்தினால், அந்த அணியின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. மேலும் சச்சினால் அதிகப்படியான ரசிகர்களும் அந்த அணிக்கு கிடைத்திருந்தது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் முதல் ஐந்து வருடங்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியான மும்பை இந்தியன்ஸ் அணியால் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. அந்த அணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக தொடர்ந்து அமைந்து வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் முதல் முறையாக 2013 ஆம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு அடுத்து 2015, 2017, 2019 மற்றும் 2020 என மொத்தம் ஐந்து முறை ரோகித் சர்மா தலைமையில் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணி வென்று அசத்தியிருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2015 ஆம் ஆண்டு முதன்முதலாக ஹர்திக் பாண்டியா வாங்கப்பட்டு உள்ளே வந்தார். அவர் தன்னுடைய ஐபிஎல் முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற அணியில் இடம் பிடித்தார். மேலும் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்திய காரணத்தினால், அடுத்த ஆண்டு அவர் இந்திய அணிக்கும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு சூரியகுமார் யாதவ் இல்லை காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா இருவரில் யாரையாவது ஒருவரை மட்டுமே தக்க வைக்க வேண்டிய சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இருந்தது. இந்த நிலையில் அந்த அணி நேராக சூரிய குமாரிடம் சென்றது. ஹர்திக் பாண்டியாவை கைவிட்டது.

- Advertisement -

தற்பொழுது அதே அணி அவரை மீண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து அழைத்து வந்திருக்கிறது. ஆனால் தங்களுக்கு ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை அந்த பொறுப்பில் நீக்கிவிட்டு, அழைத்து வந்த ஹர்திக் பாண்டியாவை நியமித்திருக்கிறது. இதுதான் தற்பொழுது ஐபிஎல் வட்டாரத்தில் பெரிய விமர்சனங்களை உருவாக்கியபடி இருக்கிறது.

இதையும் படிங்க : நான் எது செஞ்சாலும் என் பேர்லயே எழுதுங்க.. நான் தோனி கிடையாது – துருவ் ஜுரல் ஓபன் பேட்டி

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறும் பொழுது “மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை அணிவது எனக்கு எப்பொழுதும் சிறப்பு வாய்ந்தது. என்னுடைய கிரிக்கெட் பயணம் இங்கிருந்துதான் துவங்கியது. மீண்டும் வீட்டிற்கு திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆரம்ப முதலே மலிங்கா எனது சகோதரராகவும், பயிற்சியாளர் மார்க் பவுச்சர் அற்புதமானவராகவும் இருந்தார். எல்லோரும் பெருமைப்படக்கூடிய ஒரு பிராண்டு கிரிக்கெட்டை நாங்கள் விளையாடுவோம். அது நிச்சயம் யாருக்கும் மறக்கமுடியாத சவாரியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.