இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாகத் திகழும், இந்திய உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரான ரஞ்சி தொடரின் 84வது சீசன், ஐ.பி.எல் தொடருக்கு முன்பு, பின்பு என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு இன்றோடு முடிவு பெற்றிருக்கிறது.
இந்த ஆண்டின் ரஞ்சி தொடரின் அரையிறுதிக்கு மும்பை, பெங்கால், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றன. அரையிறுதியில் மும்பை உத்திரப் பிரதேச அணியையும், மத்தியப் பிரதேச அணி பெங்கால் அணியையும் வீழ்த்தி இறுதிபோட்டிக்குத் தகுதி பெற்றன.
இறுதிபோட்டி கடந்த ஜூன் 22 ஆம் தேதி பெங்களூர் எம்.சின்னசுவாமி மைதானத்தில் துவங்கியது. டாஸில் வென்ற மும்பை அணியின் கேப்டன் பிரித்வி ஷா முதலில் மும்பை அணி பேட்டிங் செய்யும் என அறிவித்தார்.
இதன்படி மும்பை அணிக்குத் துவக்கம் தர களமிறங்கிய கேப்டன் பிரித்விஷா மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி ஓரளவு நல்ல துவக்கத்தையே தந்தாலும், அடுத்து வந்த வீரர்கள் யாரும் நல்ல பங்களிப்பைத் தரவில்லை. ஆனால் கடந்த இரு ரஞ்சி சீசன்களில் அசுர பார்மில் இருக்கும் சர்ப்ராஷ்கான் இந்த ஆட்டத்திலும் அபாரமாய் விளையாடி சதமடித்தார். இதனால் மும்பை அணி 374 என்று சவால் அளிக்கும் ஸ்கோரை முதல் இன்னிங்ஸில் பெற்றது.
ஆனால் அடுத்துக் களமிறங்கிய பெங்கால் அணியின் துவக்க ஆட்டக்காரர் யாஷ் துபே 133, சுபம் ஷர்மா 116, ரஜத் பட்டிதார் 122 என மூவரும் அடித்த சதத்தால், 536 ரன்களை குவித்து, முதல் இன்னிங்ஸ் முன்னிலையைப் பெற்றது.
இதற்கடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய மும்பை அணி 269 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தது. இதையடுத்து களமிறங்கிய மத்தியப் பிரதேஷ் அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் அடித்து வெற்றிபெற்று, முதல் முறையாக ரஞ்சி கோப்பையைக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக சுபம் சர்மாவும், தொடர் நாயகனாக சர்ப்ராஷ்கானும் அறிவிக்கப்பட்டனர்.
The history making moment for Madhya Pradesh. pic.twitter.com/PGBexD13a7
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 26, 2022
இந்தப் போட்டியில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது. என்னவென்றால் இதே பெங்களூர் எம்.சின்னசுவாமி மைதானத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்னர், 1999ஆம் வருடம், சந்திரகாந்த் பன்டிட் என்ற வீரரின் தலைமையின் கீழ், ரஞ்சி கோப்பை இறுதிபோட்டியில் மத்தியப் பிரதேச அணி தோற்றிருந்தது. அப்போது கோப்பையைத் தவறவிட்ட மத்தியப் பிரதேச அணியின் கேப்டன் சந்திரகாந்த் பண்டிட்தான், தற்போது கோப்பையை வென்ற மத்தியப் பிரதேச அணியின் பயிற்சியாளர். வெற்றிக்குப் பிறகு அவர் உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்பட்டார். வீரர்கள் அவரைத் தோளில் சுமந்து வெற்றியைக் கொண்டாடினர்!