இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜாகிர் கான் தனது திறமையான பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். 2011ஆம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பை வெல்லவும் முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரின் முன்னணி அணி ஒன்றில் ஜாகிர் கான் ஆலோசகராக பணியாற்ற போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
2008ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது வரை 17 ஆண்டுகள் நிறைவடைந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக பத்து அணிகள் கலந்து கொள்ளும் இந்த ஐபிஎல் தொடரில் இந்திய முன்னாள் வீரர்களும் மற்றும் சர்வதேச தொடரில் விளையாடி அனுபவம் பெற்ற வெளிநாட்டு வீரர்கள் என ஒவ்வொருவரும் இந்த ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளர்கள் மற்றும் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
2022ஆம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு தொடக்கத்தில் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டார். அவரது வழிகாட்டுதலில் லக்னோ அணி கடந்த இரண்டு வருடங்களாக நன்றாகவே செயல்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக கம்பீர் ஆலோசகராக செயல்பட்டதை தொடர்ந்து லக்னோ அணியில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் கிரிக்பஸ் இணையத்தில் வெளிவந்துள்ள தகவலின் படி, லக்னோ அணி நிர்வாகம் தற்போது இந்திய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாஹீர் கானை ஆலோசகராக நியமிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜாகிர் கான் வெறும் ஆலோசகராக மட்டுமில்லாமல் தனது பந்து வீச்சு அனுபவத்தை மற்ற வீரர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வலுவாக பரிசீலிக்கப்பட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
முன்பு ஆலோசகர்களாக செயல்பட்டுக் கொண்டிருந்த கௌதம் கம்பீர் மற்றும் மோர்னே மோர்கல் ஆகியோர் இந்திய அணியில் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த இடத்திற்கு ஜாகிர் கானை கொண்டு வருவதற்கு கிட்டத்தட்ட இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தெரிகிறது. எனவே அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
இதையும் படிங்க:பங்களாதேஷ் டெஸ்ட்.. பாகிஸ்தான் பிளேயிங் XI அறிவிப்பு.. 28 வருடத்தில் 2வது முறை.. முன்னாள் வீரர்கள் விமர்சனம்
ஐபிஎல் தொடரில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகளுக்காக ஜாகிர் கான் விளையாடியுள்ள நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் குளோபல் தலைவராக நியமிக்கப்பட்டார். மற்றும் சில வருடங்கள் ஆலோசகராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தார். எனவே லக்னோ அணிக்கு அவரது வருகை நிச்சயம் பெரிய நம்பிக்கையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.