ரிஷப் பண்ட் அவரது திறமையினால் சதம் அடிக்கவில்லை ! முழு பாராட்டுகளும் இங்கிலாந்து பவுலர்களுக்கு தான் – முன்னாள் பாகிஸ்தான் வீரர் மொஹமத் ஆசிப் சர்ச்சைப் பேச்சு

0
307
Mohammad Asif and Rishabh Pant

ஐ.பி.எல் முடிந்து ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா வந்திருந்தது தென் ஆப்பிரிக்க அணி. அந்தத் தொடரில் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட, கே.எல்.ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அவரும் தொடர் தொடங்குவதற்கு முன்பே காயமடைந்து தொடரிலிருந்து வெளியேற, விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கேப்டனா அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்தத் தொடரில் கேப்டன்சி அழுத்தம் அவரது பேட்டிங் திறனையும் பாதிக்க, செய்த தவறையே செய்து ஆட்டமிழந்தார். நான்கு ஆட்டத்தில் விளையாடிய அவர் ஒருமுறைக் கூட 30 ரன்களை தாண்டவில்லை. இதனால் அடுத்து ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கற டி20 உலகக்கோப்பை போட்டிக்கு ரிஷாப்புக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட வேண்டுமென்ற குரல்கள் எழ ஆரம்பித்தன.

இந்த நிலையில் இந்திய அணி இரண்டாகப் பிரிந்து இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தது. இதில் இஙீகிலாந்து செல்லும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ரிஷாப் பண்ட் இடம்பெற்றார். இந்த அணி ரோகித் சர்மா கோவிட்டால் பாதிக்கப்பட, ஜஸ்ப்ரீட் பும்ரா தலைமையில் ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியோடு கடந்த 5 ஆம் தேதி முதல் பர்மிங்ஹாம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸில் வென்ற பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, கேப்டனின் முடிவை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சரியென்று நிரூபித்தனர். இந்திய அணி தனது ஐந்து முக்கிய விக்கெட்டுகளை 98 ரன்களுக்குள் இழந்து நெருக்கடியில் சிக்கியது. அந்தச் சூழலில் போட்டியைப் பார்த்த யாருமே இந்திய அணி 200 ரன்களை தொடும் என்று நினைக்கவில்லை.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி மெல்ல ஆரம்பித்து, போகப்போக பவுண்டரி சிக்ஸர்களால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்குப் பதிலடி தர ஆரமைபித்தனர். குறிப்பாக ரிஷாப் பண்ட்டின் ஆட்டத்தில் அனல் பறந்தது. 89 பந்துகளில் சதமடித்த ரிஷாப் பண்ட், 111 பந்துகளில் 146 ரன்களை அடித்து வெளியேறினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களை குவித்தது. இரண்டாம் ஜடேஜா சதமடிக்க, இந்திய அணி 416 ரன்களோடு முதல் இன்னிங்சை முடித்தது. ஆன்டர்சன் 60 ரன்கள் தந்து ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். நியூசிலாந்து அணியுடனான கடைசிப் போட்டியில் இரு இன்னிங்சிலும் தலா ஐந்து விக்கெட் வீழ்த்திய ஜாக் லீச் 9 ஓவர்கள் பந்துவீசி 71 ரன்களை விட்டுத்தந்தார்.

இந்த ஆட்டம் குறித்துப் பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மொகம்மத் ஆசீப், அதில் “இங்கிலாந்து பவுலர்கள் சரியாகச் செயல்படவில்லை. ரிஷாப் பண்ட் பெரிய பிரமாதமாக எல்லாம் விளையாடவில்லை. நான் இங்கிலாந்து பவுலர்களை தனித்துப் பெயரிட்டுக் கூற விரும்பவில்லை. அவர்கள் மொத்தமாக ரிஷாப் பண்டிற்கு எதிராக, அவரது பலவீனமான பகுதிகளில் பந்துவீசவில்லை. ரிஷாப்-ஜடேஜா பேட்டிங் செய்யும் போது லீச்சை வீசவைத்தது நல்ல முடிவில்லை. நான் ரிஷாப்பிற்கு எதிரானவன் இல்லை. ஆனால் இப்படியெல்லாம் செய்வது எதிரணி வீரர்களுக்குச் சாதகமாகத்தான் அமையும்” என்று பேசி இணையத்தில் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறார்.

- Advertisement -