நடப்பு ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட பரபரப்பான போட்டியில் இந்திய அணி ஆறு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கான எல்லா வாய்ப்பும் இருந்தும் தோல்வியடைந்தது. தோல்விக்கான காரணங்கள் குறித்து போட்டிக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேசியிருக்கிறார்.
நேற்றைய போட்டிக்கான டாஸில் பாகிஸ்தான் அணி வென்றது அவர்களுக்கு கூடுதல் பலமாக அமைந்தது. மைதான சூழ்நிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மை பந்து வீச்சுக்கு மிகச் சாதகமாக இருந்தது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இதைப் பயன்படுத்தி மிகச்சிறப்பாகவே பந்து வீசினார்கள்.
இந்திய அணி 19 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. 160 முதல் 170 ரன்கள் எடுக்கக்கூடிய நிலையில் இந்திய அணி ஒரு கட்டத்தில் காணப்பட்டது. ஆனால் ஆடுகளத்தை பயன்படுத்த ஆரம்பித்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் ஒட்டுமொத்தமாக இந்திய அணியை மடக்கினார்கள்.
இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் மேஜிக் நடத்தி காட்டினார்கள். அந்த அணி 20 ஓவர்கள் பேட்டிங் செய்து 7 விக்கெட் மட்டுமே இழந்தாலும் கூட, 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி பத்து ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு பாகிஸ்தானை முடக்கினார்கள். பாகிஸ்தான அணி பரிதாபமாக 6 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தத் தோல்விக்கு பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் “நாங்கள் பந்துவீச்சில் நன்றாகவே செயல்பட்டோம். ஆனால் பேட்டிங்கில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தோம். எங்களது பேட்டிங்கில் அதிக டாட் பந்துகள் இருந்தது. பத்து ஓவர்களுக்கு பிறகு அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள். நாங்கள் பத்து ஓவர்களில் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்கின்ற அளவில் எடுத்திருந்தோம்.
இதையும் படிங்க : எல்லாரையும் கூட்டி இதைத்தான் சொன்னேன்.. இவரை பத்தி பேச மாட்டேன் ஏன்னா அவர் மேதை – ரோகித் சர்மா பேச்சு
ஆனால் அடுத்த பத்து ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து கொடுத்து விட்டோம். கடைசிக்கட்ட பேட்ஸ்மேன்களிடமிருந்து நாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது. எங்களுடைய உத்திகள் எளிமையானது. ஒரு ஓவருக்கு ஐந்து முதல் ஆறு ரன்கள் எடுக்க நினைப்போம். முதல் ஆறு ஓவர்களில் 40 முதல் 45 ரன்கள் எடுக்க திட்டமிட்டோம். பந்துகள் கொஞ்சம் மெதுவாகவும் பவுன்ஸ் ஆகியும் வந்தன. டிராப் இன் ஆடுகளத்தில் இது எதிர்பார்த்ததுதான். தோல்வி குறித்து உட்கார்ந்து பேசுவோம். அடுத்த இரண்டு போட்டிகளுக்கு தயாராவோம்” என்று கூறி இருக்கிறார்.