ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக அடித்துள்ள 49 சதங்களை முறியடிக்க, விராட் கோலிக்கு இன்னும் இரண்டு சதங்கள் தேவையாக இருக்கிறது.
விராட் கோலி தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதங்கள் அடித்து இருக்கிறார். இன்னும் இரண்டு சதங்கள் அடிக்கும் பொழுது அவர் சச்சினின் அதிகபட்ச ஒருநாள் கிரிக்கெட் சாதனையை முறியடிப்பார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரிலேயே இது நடக்குமா? என்பது தான் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் இந்த உலகக் கோப்பை தொடர் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒன்றாக மாறும்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் மட்டும் மூன்று முறை சதத்தை விராட் கோலி தவற விட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில், அவரால் பெரிய அரைசதங்கள் அடிக்கமுடிகிறது. ஆனால் அதை சதமாக்க தவற விட்டுவிடுகிறார்.
மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் குயின்டன் டி காக்குக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் விராட் கோலி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக பேசி உள்ள பாகிஸ்தான அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் உள்குத்தாக விராட் கோலியை வைத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை கடுமையாக தாக்கி இருக்கிறார். இவர்கள் இருவருக்குமே ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “விராட் கோலி நேபாளம், நெதர்லாந்து, ஜிம்பாப்வே போன்ற நாடுகளுக்கு எதிரான தொடர்களில் விளையாட விரும்புவதில்லை. அப்படி அவர் விளையாடுவதாக இருந்தால் நீண்ட காலத்திற்கு முன்பாகவே சச்சின் சத சாதனையை அவர் முறியடித்து இருப்பார். ஆனால் அவர் இப்படியான தொடர்களில் விளையாடுவதில்லை.
மக்கள் எதற்காக விராட் கோலியை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இது முழுக்க முட்டாள்தனம். இரண்டாவதாக நீங்கள் விராட் கோலியின் இன்டெண்ட்டை பார்க்க வேண்டும். அவர் கடைசியாக இலங்கைக்கு எதிராக கூட பந்துக்கு பந்து ரன் எடுத்தார்!” என்று மறைமுகமாக பாபர் அசாமை தாக்கி பேசியிருக்கிறார்!