கோலி ராகுல் ஜடேஜா அசத்தல்.. ஆஸி வரலாற்றில் முதல் அடி.. இந்தியா வெற்றியுடன் உலக கோப்பையை தொடங்கியது!

0
469
Virat

இன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதிக்கொண்ட போட்டி முடிவுக்கு வந்திருக்கிறது!

டாஸ் வென்று பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு மார்ஸ் ரன் இல்லாமல் வெளியேறினார். அடுத்து வார்னர் மற்றும் ஸ்மித் 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். வார்னர் 41, ஸ்மித் 46 ரன்களில் வெளியேறினார்கள்.

- Advertisement -

அடுத்து தொடர்ச்சியாக லபுசேன் 27, மேக்ஸ்வெல் 15, அலெக்ஸ் கேரி 0, கேமரூன் கிரீன் 8, பேட் கம்மின்ஸ் 15, ஸ்டார்க் 28, ஆடம் ஜாம்பா 4, ஹாசில்வுட் 1* ரன்கள் எடுக்க 49.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3, பும்ரா மற்றும் குல்தீப் 2, அஸ்வின் மற்றும் ஹர்திக் 1 என விக்கெட் கைப்பற்றி அசத்தினார்கள். இந்த போட்டியில் பந்து வீசிய இந்திய வீரர்கள் எல்லோருக்கும் விக்கெட் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி இரண்டு ரன்களுக்கு இசான் கிஷான், ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் என மூன்று விக்கெட்டுகளை இழந்தது. மூவருமே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கேஎல்.ராகுல் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை கரை சேர்த்தார்கள். இருவருமே அரைசதம் கடந்தார்கள். இந்த ஜோடி 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. விராட் கோலி 116 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டு ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து களத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழக்காமல் 11 ரன்கள் எடுத்தார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று விளையாடிய கேஎல்.ராகுல் 115 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் உடன் 97 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேஸில்வுட் 3 விக்கெட் கைப்பற்றினார்.

உலகக்கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா அணி மூன்று முறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி இருக்கிறது. எல்லா போட்டியிலும் அந்த அணி வெற்றி பெற்றிருக்கிறது. முதல்முறையாக ஆஸ்திரேலிய அணி சென்னையில் தோல்வி அடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!