“நான் no.1 இடத்தை கனவில் கூட நினைக்கல.. ஆனா இனிமேல்..” – ரவி பிஷ்னாய் அசத்தல் பேட்டி.!

0
137

இந்திய அணி தற்போது சவுத் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகளை கொண்ட தொடரில் முதலில் விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி நாளை தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐசிசி வீரர்களின் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இவர் ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கானை பின்னுக்கு தள்ளி 699 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறார். ரஷீத் கான் 692 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் ஆதில் ரசீது மற்றும் இலங்கை அணியின் வணிந்து ஹசரங்கா ஆகியோர் 679 புள்ளிகள் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளனர். ஐந்தாவது இடத்தில் இலங்கை அணியின் மற்றொரு சுழற் புதிச்சாளரான மகேஷ் தீக்ஷனா 677 புள்ளிகளுடன் இருக்கிறார். ஐசிசி யின் முதல் ஐந்து ரேங்கில் இருக்கும் வீரர்களும் சுழற் பந்துவீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் தீக்ஷனா தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடிய ரவி பிஷ்னாய் 5 போட்டிகளில் விளையாடி ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் அந்தத் தொடரின் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார் அவர். இதனைத் தொடர்ந்து தற்போது ஐசிசி டி20 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார். சமீபகாலமாகவே இந்திய டி20 அணியின் முதல் தேர்வு சுழற் பந்துவீச்சாளராக இவர் விளங்கி வருகிறார்.

இதுவரை 21 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் ரவி பிஸ்னாய் 34 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இவரது பந்துவீச்சு சராசரி 17.38 ஆகும். 16 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியது இவரது சிறப்பான பந்து வீச்சு. ஆசிய கோப்பை போட்டிகளுக்கு முன்பாக இந்திய அணி அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடியது. அதிலும் ரவி பிஸ்னாய் தனது சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் நம்பர் ஒன் டி20 பௌலராக முன்னேறி இருப்பது குறித்து பிசிசிஐ டிவிக்கு பேட்டியை அளித்திருக்கிறார் ரவி பிஷ்னாய். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர்” உலகின் நம்பர் ஒன் டி20 பௌலராக தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் சிறப்பான ஒரு உணர்வு. அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பூமியிலிருந்து ஆகாசத்தில் பறப்பது போல் உள்ளது. ஐசிசி டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்திற்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை”.

“ஆனால் அது நிஜமாகி இருக்கிறது. இந்த இடத்தில் தொடர்ந்து நீடிக்க விரும்புகிறேன். அதற்காக கடினமாக உழைக்க தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும் அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி”, என அவர் தெரிவித்திருக்கிறார் . 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். தொடர்ச்சியாக இந்திய அணிக்கு தனது பங்களிப்பை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.