ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் முடிந்தவரை தனது அணிக்காக கிரிக்கெட் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனடிப்படையில் ஆரம்ப காலகட்டத்தில் இந்திய அணியில் இடம் பெற்று இருந்த வீரர்கள் மிக நீண்ட கிரிக்கெட் பயணத்தை கொண்டிருந்தார்கள்.
ஆனால் தற்போது சூழ்நிலைக்கு தகுந்தவாறு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் எந்த கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக தொடர்ச்சியாக விளையாடுகிறாரோ அவருக்கு மட்டுமே அடுத்தடுத்த வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதன்காரணமாக தற்போது இந்திய அணியில் பல்வேறு பேட்ஸ்மேன்கள், ஆல்ரவுண்டர் வீரர்கள் மற்றும் பவுலர்கள் என அடுத்தடுத்து வரிசை கட்டி கொண்டு வீரர்கள் அணிக்காக விளையாட தயாராக இருக்கின்றனர்.
இருப்பினும் ஒரு சில வீரர்களுக்கு நீண்ட காலம் கிரிக்கெட் பயணம் நீடிப்பது கிடையாது. வயது காரணமாகவோ அல்லது சரியாக பங்களிக்க தவறியதன் காரணமாக அவர்களது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும். எனவே அப்படி ஒரு சில வீரர்கள் தாங்கள் விளையாடிய கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடி மேன் ஆப் தி மேட்ச் பட்டத்துடன் சென்ற வீரர்களைப் பற்றி பார்ப்போம்
இர்பான் பதான்
உள்ளூர் தொடர்களில் பரோடா அணிக்காக மிக சிறப்பாக விளையாடிய இவருக்கு இந்திய அணியில் பின்னாளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் அடிப்படையில் ஒரு ஆல்ரவுண்டர் வீரர் ஆவார். இவர் களமிறங்கிய வேளையில் ஆரம்பத்தில் மிக சிறப்பாக விளையாடி வந்தாலும் அதன் பின்னர் அணியில் ஒரு சில மாற்றங்கள் ஏற்பட இவருக்கான வாய்ப்பு குறைக்கப்பட்டது.
எதிர்பாராத விதமாக இவர் ஒரு ஒருநாள் போட்டியில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக தனது கடைசி போட்டியில் விளையாடினார். ஆனாலும் அந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல் முக்கியமான 29 ரன்களை இந்திய அணிக்கு அடித்தும் கொடுத்தார். அதன் காரணமாக இவருக்கு மேன் ஆப் தி மேட்ச் பட்டம் வழங்கப்பட்டது.
பிரக்யன் ஓஜா
இவருடைய கடைசி ஆட்டம் இந்தியா ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விளையாடிய கடைசி ஆட்டம் ஆகும். ஆம் சச்சின் டெண்டுல்கர் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டி தான் இவருக்கு தன்னுடைய வாழ்நாளில் கடைசி டெஸ்ட் போட்டியாக அமைந்தது.
இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக பல முறை மிக சிறப்பாக பந்துவீசி நிறைய முறை இந்திய அணியை வெற்றி பெறச் செய்திருக்கிறார். மகேந்திர சிங் தோனிக்கு மிகப்பிடித்த பந்துவீச்சாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் விளையாடிய கடைசி போட்டியிலும் மிக சிறப்பாக பந்து வீசி அந்த போட்டிக்கான மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தை தட்டிச்சென்றார்.
சுப்ரமணியம் பத்ரிநாத்
இந்திய அணிக்காக ஒரே ஒருமுறை டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவர் விளையாடினார். மிக சிறப்பாக விளையாடிய அந்த ஆட்டத்திற்கான மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தையும் தட்டிச் சென்றார்.
இருப்பினும் இவரால் ஆரம்பம் முதல் இறுதிவரை அதிரடியாக அடித்து விளையாட முடியாது. அணி இவருக்கு பதிலாக விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் போன்ற வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தினால் இவருக்கான வாய்ப்பு அதன் பின்னர் வழங்கப்படவில்லை.
எனவே ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே இவர் விளையாடினார். அந்த முதல் மற்றும் கடைசி போட்டியிலேயே மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தையும் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமித் மிஸ்ரா
ஒவ்வொரு இந்திய ரசிகரும் 2016ஆம் ஆண்டு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். முதல் நான்கு போட்டி முடிவில் இந்தியா இரண்டு போட்டியிலும் நியூசிலாந்து இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றது.
கடைசி ஒருநாள் போட்டி வெற்றியை நிர்ணயிக்கும் போட்டி என்பதால் மிக நிதானமாக இந்திய அணி விளையாட தொடங்கியது. அந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது ஜெர்சியில் தங்களுடைய அம்மாவின் பெயரை பதித்து இருந்தனர்.
இந்திய அணி கடைசி போட்டியில் 269 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி தோல்வி பெற அதிக வாய்ப்பிருந்த நிலையில், அமித் மிஸ்ரா அந்த போட்டியில் மிக அற்புதமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி நியூசிலாந்து அணியை 79 ரன்களுக்குள் சுருட்டினார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த போட்டியில் மிக சிறப்பாக செயல்பட்டு அந்த போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருதை அமித் மிஸ்ரா தட்டிச் சென்றார். ஆனால் அதுவே அவரது கடைசி ஒருநாள் போட்டி என்பதும் வேதனைக்குரிய விஷயமாகும்.