ஐசிசி ரேங்கிங்.. பிசிசிஐயால் வந்த வினை.. நம்பர் 1 இடத்தை இழந்த 2 இந்திய வீரர்கள்.. நடந்தது என்ன.?

0
2048

உலகக்கோப்பை தொடருக்கு பின் மீண்டும் கிரிக்கெட் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடிய பின், தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதேபோல் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 1-1 என்ற நிலையில் சமன் செய்தது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 2 போட்டிகளிலும் சேர்த்து 156 ரன்களை விளாசினார். இதன் காரணமாக டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.

- Advertisement -

ஆனால் அந்த 2 போட்டிகளிலும் நம்பர் 1 டி20 பவுலராக இருந்த இந்திய அணியின் இளம் வீரரான ரவி பிஷ்னாயை பிளேயிங் லெவனிலேயே சேர்க்கவில்லை. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரில் இங்கிலாந்து அணி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஒருநாள் தொடரை இழந்தாலும், டி20 தொடரில் எழுச்சி பெற்றுள்ளது.

இதில் 4 போட்டிகளில் விளையாடி ஆடில் ரஷீத் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கேற்றியுள்ளார். இதனால் டி20 பவுலர்களுக்கான ஐசிசி தரவரிசையில் ஆடில் ரஷீத் 3வது இடத்தில் இருந்து 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதனால் இந்திய அணியின் இளம் வீரர் ரவி பிஷ்னாய் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். நம்பர் 1 வீரரான ரவி பிஸ்னாய்க்கு பிசிசிஐ வாய்ப்பு தராதது தான் இதற்கு காரணம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதேபோல் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து சுப்மன் கில் விலகினார். இதனால் ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சுப்மன் கில், கீழே தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

810 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு சுப்மன் கில் தள்ளப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான பாபர் அசாம் மீண்டும் முதலிடத்திற்கு 824 புள்ளிகளுடன் முன்னேறியுள்ளார். அதேபோல் 11வது இடத்தில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விலகியதால் ஒரு இடம் கீழே இறங்கியுள்ளார்.

அதேபோல் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டுக்கான கேப்டன் கேஎல் ராகுல் ஒரு இடம் முன்னேறி 16வது இடத்தில் உள்ளார். சுப்மன் கில் முதலிடத்தில் இருந்து கீழே இறங்கியிருப்பது இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கும் பிசிசிஐ எடுத்த முடிவு தான் காரணம் என்று சில ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.