“ஒரு குளியல் போடலாம்னு இருந்தேன்.. அதுக்குள்ள பேட் பண்ண வச்சுட்டாங்க!” – கேஎல்.ராகுல் கலகலப்பான பேட்டி!

0
1961
Rahul

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஒரே நேரத்தில் உச்சகட்ட அச்சத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கிய போட்டியாக இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட போட்டி அமைந்திருக்கிறது.

13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் விளையாடின. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பை பயணத்தை தொடங்கி இருக்கிறது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆடுகளம் கொஞ்சம் மெதுவாகவும் இரட்டை வேகத்திலும் இருந்ததை இந்திய பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பயன்படுத்தி ஆஸ்ரேலிய அணியை சுருட்டினார்கள்.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி இரண்டு ரன் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டை இழந்து, ஒட்டுமொத்தமாக ஆட்டத்தை கோட்டை விட்டது போல் இருந்தது. இதற்கு அடுத்து விராட் கோலி தந்த ஒரு எளிய கேட்ச்சை மார்ஸ் தவற விட்டார்.

இதன் காரணமாக போட்டியை பார்த்த அனைவருமே பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளானார்கள். இறுதியாக விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் சேர்ந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெல்ல வைத்தார்கள். கேஎல்.ராகுல் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 97 ரன்கள் எடுத்து அணியை வெல்ல வைத்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

- Advertisement -

ஆட்டநாயகன் விருதுக்குப் பிறகு பேசிய கே.எல்.ராகுல் ” விளையாடும் பொழுது விராட் கோலியுடன் அதிகம் உரையாடவில்லை. ஃபீல்டிங் செய்து முடித்து, ஒரு அரைமணி நேரம் குளியல் போடலாம் என்று இருந்தேன். ஆனால் நான் அதற்குள் பேட் செய்ய வர வேண்டி இருந்தது.

நான் டெஸ்ட் கிரிக்கெட் போல விளையாட வேண்டும் என்று விராட் கோலி என்னிடம் கூறினார். அணிக்காக கொஞ்சம் இப்படியான கிரிக்கெட் விளையாடியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் உதவி இருந்தது. இறுதியில் பனிப்பொழிவு வந்து குறுக்கிட்டது.

இந்த விக்கெட் இரட்டை வேகத்தில் இருந்தது. இது பேட்டிங் செய்ய நல்ல விக்கெட் கிடையாது. ஆனால் நல்ல கிரிக்கெட்டுக்கான விக்கெட். குறிப்பாக நீங்கள் தென்னிந்தியாவில் சென்னையில் பெறுவது இதைத்தான்!” என்று கூறி இருக்கிறார்!