ஐபிஎல்-ல் 12 ஆண்டுகளாக மும்பைக்கு தீராத சோகம்.. கடைசி 5 ஓவரில் திரில்.. குஜராத் அபார வெற்றி

0
548
Gill

ஐபிஎல் தொடரின் 17வது சீசனில் இன்று, குஜராத் அகமதாபாத் மைதானத்தில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். மும்பை இந்தியன் அணியில் காயம் காரணமாக சூரியகுமார் யாதவ் இடம்பெறவில்லை.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் விருதிமான் சகா 19(15), கேப்டன் சுப்மன் கில் 31(22), அசமத்துல்லா ஓமர்சாய் 17(11), டேவிட் மில்லர் 12(11), ராகுல் திவாட்டியா 22(15), விஜய் சங்கர் 6(5), ரஷித் கான் 4(3) ரன்கள் எடுத்தார்கள். ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடி தமிழக வீரர் சாய் சுதர்சன் மூன்று பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன், 39 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா நான்கு ஓவர்கள் பந்து வீசி 14 ரன்கள் மட்டும் விட்டு தந்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருடைய பந்துவீச்சின் காரணமாகவே 200 ரன்கள் எடுக்கும் நிலையில் இருந்த குஜராத் அணி 168 ரன்களில் நின்றது. மேலும் முதல் ஓவரே வீசிய ஹர்திக் பாண்டியா மொத்தம் மூன்று ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காமல் 30 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் இசான் கிசான் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். சூரியகுமார் இடத்திற்கு நமன் தீர் என்ற புதிய வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி கொண்டு வந்தது. இவர் மொத்தம் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் என அதிரடியாக 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டு விக்கெட்டையும் ஆப்கானிஸ்தானின் அஸமத்துல்லா ஓமர்சாய் கைப்பற்றினார்.

ஒரு முனையில் பொறுப்பாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா உடன் இம்பேக்ட் பிளேயராக டிவால்ட் பிரிவியஸ் இணைந்தார். இந்த ஜோடி 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ரோகித் சர்மா 29 பந்துகளில் 7 பௌண்டரி மற்றும் 1 சிக்ஸர் உடன் 43 ரன்கள் எடுத்து சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அடுத்து திலக் வர்மா விளையாட வந்தார். இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடி வந்த டிவால்ட் பிரிவியஸ் மோகித் சர்மா பந்துவீச்சில் அவரின் அபாரமான கேட்சால் 38 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

கடைசி ஐந்து ஓவரில் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டிம் டேவிட் 11(10), திலக் வர்மா 25(19), ஜெரால்டு கோட்சி 1(3) ரன்கள் என வரிசையாக வெளியேறினார்கள். மும்பை இந்தியன் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து இருந்த பொழுது, கடைசி ஓவரில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை உமேஷ் யாதவ் வீச, முதல் பந்தில் சிக்ஸரும் அடுத்த பந்தில் பவுண்டரியும் அடித்த ஹர்திக் பாண்டியா மூன்றாவது பந்தில் ஆட்டம் இழந்தார். நான்காவது பந்தில் பியூஸ் சாவ்லாவும் ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து கடைசி இரண்டு பந்தில் ஒன்பது ரன்கள் தேவைப்பட, ஒரு ரன் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி எடுக்க, பரபரப்பான இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : மலிங்கா சாதனையை அவர் கண் முன்னாலே உடைத்த பும்ரா.. தப்பித்த ஹர்திக் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் அணியின் தரப்பில் ஓமர்சாய், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் மோகித் சர்மா என நான்கு பந்துவீச்சாளர்களும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். மும்பை இந்தியன் அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பொழுது தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்து இருக்கிறது. மேலும் 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதல் இதுவரையில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றதில்லை என்ற சோகம் தொடர்கிறது.