இந்திய அணியின் 26 வயதான இளம் வீரர் ரிஷப் பண்ட் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் மிகவும் பாராட்டி பேசியிருக்கிறார்.
ரிஷப் பண்ட் 2022 ஆம் ஆண்டு இறுதியில் சாலை விபத்தில் சிக்கினார். அந்த நேரத்தில் அவர் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப முடியுமா? என்கின்ற அளவுக்கு பலத்த சந்தேகங்கள் இருந்தது. இப்படியான நிலையில் இருந்து அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் இந்திய அணிக்கு திரும்பி வந்ததோடு மிகச் சிறப்பாகவும் செயல்பட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
முன்னுதாரணமாக மாறிய ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட் மோசமான சாலை விபத்தில் சிக்கி தற்பொழுது மீண்டும் வந்து மிகப்பெரிய அளவில் சிறப்பாக செயல்படுவது இளைஞர்களை ஊக்கப்படுத்தக்கூடிய ஒரு முக்கிய விஷயமாக தற்பொழுது சமூக வலைதளங்களில் மாறி இருக்கிறது. பலரும் ரிஷப் பண்ட்டை இந்த விஷயத்தில் ஒரு முன்னுதாரணமாக காட்டி பேசி வருகிறார்கள்.
மேலும் ரிஷப் பண்ட் தனித்துவமான அட்டாக்கிங் பேட்டிங் ஸ்டைலை வைத்திருப்பவராக இருக்கிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாக அடுத்து வரக்கூடிய ஆஸ்திரேலிய தொடரில் அவர் மீது அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
ரிஷப் பண்ட் ஒரு அதிசய குழந்தை
இந்த நிலையில் ரிஷப் பண்ட் குறித்து வாசிம் அக்ரம் பேசும் பொழுது “ரிஷப் பண்டின் ஆட்டத்தை பாருங்கள். சோகத்திலிருந்து மீண்டு வந்து அவர் தன்னை நிரூபித்திருக்கும் விதத்தை பாருங்கள். அவர் விபத்து நடந்த பொழுது பாகிஸ்தானில் நாங்கள் அனைவருமே அதற்காக வருத்தப்பட்டோம். நானும் கவலையுடன் ட்விட் செய்திருந்தேன். அதிலிருந்து திரும்பி வந்து ஐபிஎல் தொடரில் 155 ஸ்ட்ரைக் ரேட்டில், 40 ஆவரேஜில், 446 ரன்கள் எடுத்து ஆச்சரியப்படுத்தினார்”
இதையும் படிங்க : சிக்ஸர் மழை.. டி20 வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத ரெக்கார்ட்.. முதல் வீரராக நிக்கோலஸ் பூரன் சாதனை
“குறிப்பாக அப்படி ஒரு மோசமான விபத்திலிருந்து மீண்டு வரும் பொழுது அந்தப் பையன் எவ்வளவு மன உறுதியுடன் இருந்திருக்க வேண்டும். டெஸ்ட்கிரிக்கெட்டில் அவர் விளையாடும் விதம், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய இடங்களில் அவர் சதம் அடித்த விதம், ஜேம்ஸ் ஆண்டர்சனை ரிவர்ஸ் ஸ்கூப் விளையாடியது என ரிஷப் பண்ட் ஒரு அதிசய குழந்தை. அவர் ஒரு அபாரமான வீரர்” என்று பாராட்டியிருக்கிறார்.