“டிராவிட்டுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.. அகர்கர்தான் எல்லாமே!” – இந்திய முன்னாள் வீரர் வெளியிட்ட ஆச்சரிய கருத்து!

0
446
Dravid

இந்திய அணிக்கு மூன்று வடிவ கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி மற்றும் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவி சாஸ்திரி விலகிக் கொண்ட பிறகு அந்த இடங்களுக்கு ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் கொண்டுவரப்பட்டார்கள்!

இந்தக் கூட்டணி அணியின் ஒட்டுமொத்த அணுகு முறையையும் மாற்ற, மற்றும் சிலபல புதிய வீரர்களை அணிக்குள் கொண்டு வர நிறைய புதிய முயற்சிகளை தொடர்ச்சியாக செய்து வந்தது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி எதிர்பாராத சில தோல்விகளை சந்தித்தது. கடந்த ஆசியக் கோப்பை, கடந்த டி20 உலக கோப்பை, கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இப்படிப் பெரிய தொடர்களை இழந்தது. அதே சமயத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக அந்த நாட்டில் ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இழந்தது.

ராகுல் டிராவிட் பொறுப்பேற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் தொடரிலேயே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பயிற்சியாளரான அவர் மீது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நிறைய விமர்சனங்களை முன் வைத்து வந்தார்கள்.

தற்பொழுது இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறும் பொழுது “மக்கள் அடிக்கடி தங்களுடைய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரை கால்பந்து அணியின் பயிற்சியாளர் போல் நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள். கிரிக்கெட்டில் ஒரு பயிற்சியாளருக்கு அதிகப்படியான அதிகாரங்கள் கிடையாது. அணி தேர்வு நடைபெறும் பொழுது கூட ராகுல் டிராவிட் கூட்டங்களில் கலந்து கொள்வது இல்லை.

- Advertisement -

ஒரு அணியின் வெற்றி தோல்வியில் பயிற்சியாளரின் பொறுப்பு என்பது கிரிக்கெட்டில் மிகவும் குறைவானது. கேப்டனாக ரோஹித் சர்மா மிகவும் அனுபவம் வாய்ந்தவர். மேலும் சிலரும் அணியில் இருக்கிறார்கள். எனவே இது ஒரு கூட்டு முயற்சி. பயிற்சியாளரை விட தேர்வுக்குழுவின் தலைவருக்கு அதிக அதிகாரம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது மிகுந்த எதிர்பார்ப்பு இந்திய அணியின் மீது இருந்தது. அது இந்திய அணிக்கு ஒரு அழுத்தமாகவே மாறியது. அந்தத் தொடரை மகேந்திர சிங் தோனி தலைமையிலான அணி வென்றது. அதற்குப் பிறகு உலகக் கோப்பை என்றால் அது இரு நாடுகளுக்கு இடையேயான தொடரை வெல்வது போல சுலபமானது என்று மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது என்பது இப்போதைய இலக்கு கிடையாது. இந்திய அணி நாக் அவுட் சுற்றில் சிறப்பாக செயல்பட வேண்டும். பெரிய போட்டிகளில் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் இந்திய அணியில் தற்போது இருக்கிறார்கள். எனவே இந்திய அணி நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக வென்று தொடரை வெல்ல வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!