இந்திய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டுக்குள் அடியெடுத்து வைத்து பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. விராட் கோலி இத்தனை ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான பாசித் அலி விராட் கோலியை கிங் என்று அழைக்க மாட்டேன் என்று கூறி இருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ராஜாவாக வலம் வந்து கொண்டு இருக்கும் விராட் கோலி இந்திய வீரராக பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். 2008ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்ததில் இருந்து சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக ஒரு இந்தியராக பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். மேலும் உலக கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் அதிக ரன்கள் குவித்தவர்களின் வரிசையில் டாப் 10 இடத்திற்குள் இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் இத்தனை ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரரான பாசித் அலி விராட் கோலியின் அர்ப்பணிப்பும், ஒழுக்கமுமே அவரை இத்தனை ஆண்டுகள் கிரிக்கெட் மிகச் சிறந்த வீரராக நிலைக்க வைத்திருக்கிறது என்றும் விராட் கோலியை கிங் என்று அழைக்க மாட்டேன் என்றும் ஏனென்றால் அது அவருக்குமே பிடிக்காது என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இது ஒரு பெரிய சாதனை. விராட் கோலி 16 ஆண்டுகள் மட்டுமல்ல இன்னும் மூன்று ஆண்டுகள் சேர்த்து 19 ஆண்டுகள் வரை கிரிக்கெட் விளையாடுவார். அவர் நல்ல உடல் தகுதியோடு இருக்கிறார். அவரது அர்ப்பணிப்பு உணர்வு இத்தனை ஆண்டுகள் நிலைக்க வைத்திருக்கிறது. சச்சின், அன்வர், ஜாவேத், இன்சமாம், கவாஸ்கர், முகமது யூசுப், யூனிஸ் கான் ஆகியோர் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டதால்தான் நிறைய ஆண்டுகள் அவர்களால் கிரிக்கெட் விளையாட முடிந்திருக்கிறது.
மேலும் நான் விராட் கோலியை கிங் என்று அழைக்க மாட்டேன். அவ்வாறு அழைப்பது விராட் கோலி கூட விரும்ப மாட்டார் என்று நினைக்கிறேன். அவரே தன்னை கிங் என்று அழைக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார். ஏனென்றால் கிரிக்கெட்டை விட பெரிய வீரர் யாரும் இல்லை. கிரிக்கெட் தான் பெரிய விஷயம். எனவே விராட் கோலி தலைவர் வார்த்தைகளை விரும்ப மாட்டார். அவர் எப்போதுமே தன்னுடைய பேட்டிங் மற்றும் ரன்கள் குறித்து பேசுவதற்கு விருப்பப்படுவார். டான் பிராட்மேன், கவாஸ்கர், சச்சின் கூட கிங் என்று அழைக்கப்படவில்லை.
இதையும் படிங்க:ஜடேஜா இருக்கிறார்.. இந்தியாவில் சிறந்த ஸ்பின்னர் நான்தான்.. காரணம் இதுதான் – சாய் கிஷோர் பேட்டி
எனவே விராட் கோலி ராஜா இல்லை என்று நினைக்கிறேன். அவர் ஒரு மிகச்சிறந்த பேட்ஸ்மேன். இன்றைய தேதிக்கு அவர் மிகச் சிறந்த பேட்டர்” என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடக்க விழாவின்போது வர்ணனையாளர் ஒருவர் விராட் கோலி கிங் என்று அழைக்க, தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் விராட் கோலி என்று அழைத்தால் மட்டுமே போதும் என்று கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.