சமீபத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறந்த பயிற்சிகள் எடுத்து வருகின்ற காரணத்தினால் தன்னை இந்தியாவின் சிறந்த சுழல் பந்துவீச்சாளராக உணர்வதாக தமிழகத்தின் சாய் கிஷோர் கூறியிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட துலீப் டிராபி அணிகளில் சாய் கிஷோர் பி டீமில் இடம் பெற்றார். இந்த அணியில் இடது கை சுழல் பந்துவீச்சாளர்களாக நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா மற்றும் இடது கை சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சர்பாஸ் கானின் தம்பி முசிர் கான் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும் சுழல் பந்துவீச்சாளர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் ராகுல் சகர் ஆகியோரும் இருக்கிறார்கள்.
தற்போது இந்திய தேசிய அணியில் இடது கை சுழல் பந்து வீச்சுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு அக்சர் படேல் என இருவரும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பந்துவீச்சில் மட்டும் இல்லாது பேட்டிங்கிலும் பெரிய பங்களிப்பை கொடுக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
இதன் காரணமாக சாய் கிஷோருக்கு இந்திய தேசிய அணியில் சமீபத்தில் வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை எதுவும் இல்லை. அதே சமயத்தில் அவர் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு சிறந்த முறையில் பயிற்சி செய்து வருவதாக கூறியிருக்கிறார். மேலும் இதன் காரணமாக தன்னை அவர் தற்போது இந்தியாவின் சிறந்த சுழல் பந்துவீச்சாளராக உணர்வதாகவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சாய் கிஷோர் கூறும் பொழுது “இப்போது கடினமாக நான் பயிற்சி செய்யும் அளவுக்கு முன்பு பயிற்சி செய்ததில்லை. ஒருவேளை நான் ஐபிஎல் தொடரில் நுழைவதற்கு முன்பாக இந்த அளவிற்கு பயிற்சி செய்திருக்கலாம். அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து என்னுடைய பயிற்சிகள் ஆரம்பிக்கிறது. நான் ஐபிஎல் தொடருக்கு வந்த பிறகு பெரிய அளவில் நேரம் கிடைக்காததால் அந்த அளவிற்குபயிற்சி செய்ய முடியவில்லை. தற்பொழுது டிஎன்பிஎல் தொடர் முடிந்து இரண்டு வாரங்களில் நான் பெரிய அளவில் பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
இதையும் படிங்க : என் தம்பி மோர்னே மோர்கல் ..கோச்சா இந்திய அணியில் இத செஞ்சா மதிப்பா இருக்கும் – அல்பி மோர்கல் கருத்து
இப்பொழுது நாட்டின் சிறந்த சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவராக என்னை நினைக்கிறேன். நான் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடவும் தயாராக இருக்கிறேன். ஜடேஜா இருக்கிறார் ஆனால் நான் அது குறித்து அதிகம் கவலைப்படவில்லை. அவருடன் நான் சிஎஸ்கே அணியில் விளையாடி இருக்கிறேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடவில்லை. எனவே துலீப் டிராபியில் அவர் என்ன செய்கிறார் என்று பார்க்க எனக்கு ஒரு நல்ல கற்றல் அனுபவமாக இருக்கும். இதனால் முன்பு இருப்பதை விட மிகவும் தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.