இந்திய அணி உலக கோப்பைக்கு தனது இரண்டாவது மற்றும் கடைசி பயிற்சி போட்டியில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்து செய்யப்பட்டது. அதே சமயத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலும் மழை மிகக் கடுமையாகப் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வீரர்கள் அனைவரும் உடல் அளவிலும் மன அளவிலும் மிகவும் நம்பிக்கையோடு சிறப்பாக காணப்படுகிறார்கள்.
ஒட்டுமொத்தமாக அணி நல்ல நிலைமையில் இருந்து வருகிறது. அதே சமயத்தில் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற சேவாக், யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் வெளியில் என்ன சத்தம் வருகிறது என்று கவனிக்க வேண்டாம் என்று கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து, விரும்பத் தகாத வகையிலான பல கருத்துக்களை சமூக வலைதளத்தில் இந்திய முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் கூறி வந்தார்.
அவருடைய ட்விட்டர் பதிவுகளில் அஸ்வின் ஆடுகளத்தை சேதப்படுத்த கேட்டுக் கொள்வார், அவர் உடல் தகுதி இல்லாத வீரர், சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனிக்கு நன்றி இல்லாதவர் என்று பல மோசமான கருத்துக்களை தெரிவித்தார்.
இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் அவருக்கு திருப்பி பதில் தர ஆரம்பித்தார்கள். ஆனால் அவர் தொடர்ச்சியாக அஸ்வின் குறித்து அதிகமான விமர்சனங்களையே முன்வைக்க ஆரம்பித்தார்.
இந்த நிலையில் இன்று அவருடைய சமூக வலைதள பக்கத்தில் “அவரது பந்துவீச்சு நடவடிக்கை பற்றி பேசுவதற்கு என்னை சில நேரத்திற்கு முன்பு அழைக்கும் அளவுக்கு அவர் சிறப்பான ஒருவராக இருந்தார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் ட்ரோல்கள் குறித்து அவரும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சம்பந்தப்பட்டவர்களுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவுப்படுத்தினார். குட்லக் அஸ்வின் எங்களை பெருமைப்படுத்துங்கள்!” என்று கூறி இருக்கிறார்!
இந்த விஷயத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் எந்தவிதமான பதிவுகளையும் அல்லது கருத்தையோ வெளிப்படுத்தி இருக்கவில்லை. இவரே சம்பந்தமில்லாமல் அஸ்வினை தாக்கி கருத்துகளை கூறிவிட்டு தற்பொழுது அஸ்வின் தன்னை அழைத்து பேசியதாக கூறி பிரச்சினையை முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!
Ravi Ashwin was nice enough to call me just a while ago to discuss his bowling action, he was as shocked with the venom of the trolls as I was . Also clarified that the people involved are in NO WAY connected to him. GOOD LUCK @ashwinravi99 Do us proud.
— Laxman Sivaramakrishnan (@LaxmanSivarama1) September 30, 2023