இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டக்வோர்த் லிவீஸ் முறைப்படி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு நாள் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.
இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 399 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் வீரர்களான கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தனர். ஸ்ரேயாஸ் ஐயர் 90 பந்துகளில் 105 ரன்கள் மற்றும் கில் 97 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய அணி ருத்ராஜ் விக்கெட்டை ஆரம்பத்திலேயே இழந்த நிலையில் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 200 ரன்கள் சேர்த்து இந்திய அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். இவர்கள் இருவரும் தேவைப்படும் நேரத்தில் அதிரடி காட்டியும் மற்ற நேரங்களில் ஒன்று இரண்டு ரன்கள் ஆகவும் சேர்த்து இந்திய அணிக்கு மிகச் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
இந்த அடித்தளத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய கேஎல்.ராகுல், இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் இந்திய அணி 399 ரன்களை குவிக்க உதவினர். இதனைத் தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணிக்காக சதம் எடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடியதை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் வெகுவாக பாராட்டினார். மேலும் கிரிக்கெட் விமர்சகர்களும் இவர்களது இன்றைய ஆட்டத்தினை வெகுவாக பாராட்டினர். ஆனால் சமூக வலைதளத்தில் கிரிக்கட் ரசிகர் ஒருவர் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சுயநலமாக விளையாடியதாக புள்ளி விவரங்களுடன் பதிவிட்டு இருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ரசிகர் தனது சமூக வலைதளத்தில் வில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் தங்களது சதத்தை நெருங்கும் வேளையில் சதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக மெதுவாக ஆடினர் என குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அந்த ரசிகர் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் திறமையானவர்கள் என்பதை மறுக்க முடியாது. அதேநேரம் அவர்கள் இருவரும் சுயநலமாக ஆடினார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் சதத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் 29 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.24.1 ஓவரில் 69 பந்துகளில் 84 ரன்கள் உடன் ஆடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதற்கு அடுத்த 26 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து இருந்தார் . மேலும் 24.1 ஓவரில் 65 பந்துகளில் 83 ரன்கள் உடன் ஆடிக்கொண்டிருந்த கில் அடுத்த 27 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார் என அந்த ரசிகர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
Hundreds for both the players, but I am not sure if these hundreds are worth celebrating. Gill was on 83 off 65 at 24.1, and Shreyas was 84 off 69. Shreyas only added 21 runs in his next 26 balls and Gill was even worse. 17 runs in 27 balls. Such kind of milestone batting should… https://t.co/cPS2kS2csz
— Gurkirat Singh Gill (@gurkiratsgill) September 24, 2023
மேலும் இந்த இரண்டு வீரர்களும் தங்களுடைய சதத்தை பூர்த்தி செய்வதற்காக ரிஸ்க் எடுக்காமல் மெதுவாக விளையாடியதாகவும் அந்த ரசிகர் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் போட்டியில் நேரலையின் போது சஞ்சய் மஞ்சரேக்கர் வர்ணனையிலும் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதம் மற்றும் அரை சதம் போன்ற மைல் கற்கள் முக்கியமானது தான் என்றாலும் அவற்றிற்காகவே பேட்டிங் செய்வது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என ரசிகர்களில் ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.