2023 உலக கோப்பை கனவு அணிக்கு சேவாக் தேர்ந்தெடுத்த 5 வீரர்கள்.. நம்பர்1-2 வீரர்களுக்கு இடம் இல்லை!

0
2525
Sehwag

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பித்து அதற்கு அடுத்து நவம்பர் மாதம் 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. குஜராத் அகமதாபாத் மைதானத்தில் துவங்கும் உலகக் கோப்பைத் தொடர் அங்கேயே முடிவுக்கும் வருகிறது!

நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி, பாபர் ஆஸம், ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் இவர்களின் பேட்டிங் மீது ரசிகர்களுக்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் துவக்க இடத்தில் வந்து பெரிய அளவில் இம்பேக்ட் கொடுக்கக்கூடிய ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் போன்ற அனுபவ துவக்க ஆட்டக்காரர்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

மேலும் உலகக் கோப்பை தொடர் என்றாலே யாரும் எதிர்பார்க்காத வீரர்கள் திடீரென்று ஆதிக்கம் செலுத்தும் பல நிகழ்வுகள் நடக்கும். உலகக் கோப்பை தொடரின் போது கிடைக்கும் நம்பிக்கையை எடுத்துக்கொண்டு திடீரென்று சில வீரர்கள் எழுச்சி பெறுவார்கள்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வைத்து ஒரு கனவு அணியை அமைக்க கேட்டதற்கு, அவர் ஐந்து வீரர்களை அந்த அணிக்கு தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

- Advertisement -

இதில் ஆச்சரியப்படத்தக்க வகையில் தற்பொழுது ஒரு நாள் கிரிக்கெட்டில் முதல் இடத்தில் இருக்கும் பாபர் அசாமை அவர் தேர்ந்தெடுக்கவில்லை. அதேபோல் பந்துவீச்சில் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மிட்சல் ஸ்டார்க்கை அவர் தேர்வு செய்யவில்லை.

வீரேந்திர சேவாக் தனது கனவு அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை கொண்டு வந்திருக்கிறார். அவருடன் மற்றொரு துவக்க ஆட்டக்காரராக டேவிட் வார்னரை கொண்டு வந்து, இடது வலதுகை காம்பினேஷன் அமைத்திருக்கிறார்.

அடுத்து அவர் மூன்றாவது இடத்திற்கு சென்றது வேறு யாருமே கிடையாது இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலிதான். அடுத்து அவருடைய இன்னொரு தேர்வு மிகவும் ஆச்சரியப்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கிறது. அவர் விக்கெட் கீப்பிங் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக நியூசிலாந்தின் கிளன் பிலிப்சை தேர்ந்தெடுத்து இருக்கிறார். ஸ்டார்க்கை சேர்த்தாமல் விட்டதை ஈடுகட்ட வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ராவை கொண்டு வந்திருக்கிறார்.

இந்த அணி குறித்து சேவாக் கூறும்போது ” இவர்கள் அனைவரும் திறமையான வீரர்கள். மேலும் இவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் திறமையாக செயல்படக்கூடியவர்கள். இவர்கள் தனியாக தங்கள் தோள்களில் சுமந்து அணியை வெற்றி பெற வைப்பார்கள். இவர்கள் கிளிக் செய்யும் பொழுதெல்லாம் அவர்கள் அணி மிக எளிதாக வெற்றி பெறும்!” என்று கூறி இருக்கிறார்!