சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 விக்கெட் ஹால் சாதனை படைத்த 3 வீரர்கள்

0
262
Ravindra Jadeja CSK

எந்த ஒரு பவுலருக்கும் 5 விக்கெட் ஹால் என்பது ஓர் மிகப் பெரிய சாதனை. அதிலும் டி20 கிரிக்கெட்டில் அது அரிதான நிகழ்வு . 20 ஓவர் போட்டியில் ஒரு நபர் அதிகபட்சமாக 24 பந்துகள் மட்டுமே வீச முடியும். அதில் 5 விக்கெட்டுகளை வீழ்துவது கடினம் தான். ஐ.பி.எலில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சு துறையில் இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளது. 4 முறை பர்ப்பில் கேப் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 3 வீரர்கள் மட்டுமே சி.எஸ்.கேவுக்காக ஐந்து விக்கெட் ஹால் சாதனை படைத்துள்ளனர். அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

லட்சுமிபதி பாலாஜி – 5/24 ( ஐ.பி.எல் 2008 )

ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை அணிக்காக முதல் முறை 5 விக்கெட் ஹால் எடுத்த வீரர் லட்சுமிபதி பாலாஜி. சென்னை – பஞ்சாப் மோதிக் கொண்ட போட்டியில் அவர் இதைச் செய்தார். முதலில் பேட் செய்த சி.எஸ்.கே நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் 181 ரன்கள் குவித்து. பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

ஷான் மார்ஷ் – ரமேஷ் சர்வான் ஜோடி ஆட்டத்தை பஞ்சாப் பக்கம் திருப்ப முயன்றது. இருவரையும் பாலாஜி பெவிலியனுக்கு அனுப்பினார். இறுதியில் பஞ்சாப் அணியின் ஒரே நம்பிக்கையான இர்பான் பதான் 40 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்து வெற்றியைப் உறுதிப்படுத்தினார். கடைசி ஓவரில் இர்பான் பத்தானுக்கு பிறகு அடுத்த 2 பந்தில் 2 விக்கெட்டுகள் எடுத்து ஹாட்டிரிக் சாதனையையும் படைத்தார்.

ரவிந்திர ஜடேஜா – 5/16 ( ஐ.பி.எல் 2012 )

பாலாஜிக்கு பிறகு 4 வருடம் கழித்து 2012இல் ஜடேஜா டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 5 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அப்போட்டியில் ஜடேஜா பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் அதிரடி காட்டினார். 29 பந்தில் 48 ரன்கள் விளாசி சென்னை அணியை 193 ரன்கள் வரை அழைத்துச் சென்றார்.

அடுத்து பேட்டிங் செய்த டெக்கான் அணி சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 119 ரன்களுக்குச் சுருண்டது. ஜடேஜா முதல் முறையாக 5 விக்கெட் ஹால் சாதனை நிகழ்த்தினார். பார்த்திவ் பட்டேல், பரத் சிப்பிலி, மன்பிரீத் கோனி, தேஜா மற்றும் டேல் ஸ்டெய்னின் ஆகியோரின் விக்கெட்டுகளை அள்ளினார்.

- Advertisement -

பவன் நேகி – 5/22 ( சி.எல்.டி20 2014 )

இப்பட்டியலில் இருக்கும் கடைசி வீரர் பவன் நேகி. மற்ற 2 வீரர்கள் பாலாஜி மற்றும் ஜடேஜா ஐ.பி.எல் லீக் போட்டிகளில் இதைச் செய்தனர். ஆனால் நேகி மிக மிக முக்கியமான சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் 5 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நேகியின் துல்லியமான சூழலால் கே.கே.ஆர் அணியை 180 ரன்களுக்கு கட்டுப்படுதியது சென்னை அணி. உத்தப்பா, காலிஸ், மனிஷ் பாண்டே, டென் டாஸ்சேட் மற்றும் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிறகு சுரேஷ் ரெய்னாவின் அபார சதத்தால் 18.3 ஓவர்களிலேயே 181 ரன்களை சேஸ் செய்து கோப்பையை வென்றது.