இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் களைக்கட்ட ஆரம்பித்துவிட்டது. இன்று முதல் பயிற்சி ஆட்டங்கள் துவங்கியிருக்கிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி உலகக் கோப்பைத் தொடர் தொடங்குகிறது!
இந்த முறை உலகக் கோப்பைத் தொடர் இந்தியாவில் நடக்கின்ற காரணத்தினால் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு அதிகபட்சம் இருக்கிறது என்று பலராலும் கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆசியக் கோப்பை தொடரிலும் அதற்கு அடுத்த ஆஸ்திரேலியா தொடரிலும் இந்திய அணி வீரர்கள் வெளிப்படுத்திய ஆட்டமும் மற்றும் காயத்தில் இருந்து திரும்பிய வீரர்களின் உடல் தகுதியும் மிகச் சிறப்பாக இருப்பது நம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது.
தற்பொழுது உலக கோப்பைக்கு இறுதியாக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் இடது கை சுழற் பந்துவீச்சாளர் அக்சர் படேல் காயம் அடைந்திருக்க, அவரது இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
இந்தியாவில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் அமையவே அதிக வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால், ஒவ்வொரு அணியில் இடம் பெற்றிருக்கும் சுழற் பந்துவீச்சாளர்கள் யார் என்பதை பொறுத்து அந்த அணியின் பவுலிங் யூனிட்டின் பலம் அமைகிறது.
இந்த வகையில் இதை குறிப்பிட்டு பேசியுள்ள யுவராஜ் சிங் கூறும்பொழுது
“சாகலை நீக்கியது தவறாக அமையும். கவலையாகவும் மாறக்கூடும். குறைந்தபட்சம் அவரை 15 பேர் கொண்ட அணியில் வைத்திருக்கலாம். ஒரு லெக் ஸ்பின்னர் உங்களுக்காக எப்பொழுதும் விக்கெட்டை வீழ்த்துவார். குல்தீப் அற்புதமாக செயல்படுகிறார். ஆனால் சாகல் டர்னிங் மற்றும் ஸ்லோ டிராகுகளில் அபாயகரமானவராக இருந்திருப்பார்.
பும்ரா திரும்பி வருவது மிகவும் நல்லது. ஏனென்றால் அந்தத் துறை மீது கொஞ்சம் கவலை இருந்தது. ஆசியக் கோப்பைக்கு முன் வீரர்களின் காயங்களால் எனக்கு கொஞ்சம் சந்தேகங்கள் இருந்தது. அதே சமயத்தில் ஆசியக் கோப்பை நீங்கள் வென்றால் உலக கோப்பையை வெல்வீர்கள் என்று கிடையாது.இது இந்தியா சிறந்த நிலையில் இருப்பதை காட்டுகிறது!” என்று கூறியுள்ளார்!