கேப்டன் பாபர் அசாமுடன் பிரச்சனையா? – முதன்முதலாக மௌனம் கலைத்த ஷாகின் அப்ரிடி!

0
311
Shaheen

கடந்த வருடம் ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு என்ன நடந்ததோ, அதே விதமான பாதிப்புகள் தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு நடந்திருக்கிறது!

கடந்த வருடம் ஆசிய கோப்பை தொடருக்குள் நுழையும் பொழுது இந்திய அணி மிகவும் தன்னம்பிக்கை கொண்ட ஒரு அணியாக இருந்தது. நட்சத்திர வீரர்கள் ஜடேஜா மற்றும் பும்ரா இல்லாத பொழுது கூட, கூடுதல் வேகப்பந்துவீச்சாளரை எடுத்துக் கொள்ளாமல் தொடருக்குள் சென்றது.

- Advertisement -

இந்திய அணியின் நம்பிக்கைக்கு தகுந்தவாறு முதல் சுற்றில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்றது. ஆனால் இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக கடைசி ஓவரில் அதிர்ஷ்டம் இல்லாமல் இரண்டு முறையும் தோற்று, தொடரை விட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

இந்த நிகழ்வு அப்படியே இந்த முறை பாகிஸ்தான் அணிக்கு நடந்திருக்கிறது. அந்த அணி தொடருக்குள் வரும்பொழுது மிகவும் செட்டில் செய்யப்பட்ட ஒரு அணியாக, நல்ல நம்பிக்கை உடைய ஒரு அணியாக வந்தது. முதல் சுற்றில் முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அவர்களுடைய பந்துவீச்சும் மிகச் சிறப்பாக இருந்தது.

ஆனால் இதற்கு அடுத்து இரண்டாவது சுற்றில் எல்லாம் தலைகீழாக மாறியது. இந்திய அணிக்கு எதிராக 228 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று பலத்த அடி வாங்கியது. இதற்கு அடுத்து பரபரப்பான போட்டியில் இலங்கை உடன் தோற்று தொடரை விட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.

- Advertisement -

இதனால் பாகிஸ்தான் அணியின் மீது ரசிகர்கள் மட்டும் அல்லாது, அந்த நாட்டின் முன்னாள் வீரர்களும் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். பாபர் அசாம் கேப்டன்சி குறித்து பலரும் தங்களுடைய அதிருப்தியை தெரிவிக்கிறார்கள்.

அதே நேரத்தில் தோல்விக்குப் பிறகு அணி கூட்டத்தில் கேப்டன் பாபர் அசாம் பேசும் பொழுது, பாகிஸ்தான் அணியின் நட்சத்திர இளம் வேகபந்துவீச்சாளர் ஷாஹின் ஷா அப்ரிடி பாபர் அசாம் கருத்துக்கு எதிர் கருத்து கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது. மேலும் பாபர் அசாம் உடன் களத்திலும் வீரர்கள் யாரும் நெருக்கமாக இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தன்னுடைய தனிப்பட்ட சமூக வலைதள பக்கத்தில் ஷாஹின் ஷா அப்ரிடி கேப்டன் பாபர் அசாம் உடன் இருப்பது போலான புகைப்படத்தை பதிவேற்றி ஆங்கிலத்தில் பேமிலி என தலைப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் தங்களுக்குள் எந்தவிதமான கருத்து வேறுபாடும் சண்டையும் கிடையாது என அவர் மறைமுகமாக கூறியிருக்கிறார்.