இந்தியாவில் வருகின்ற அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் 13-வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இதே மைதானத்தில் நவம்பர் 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது!
நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கு பெறுகின்றன. கால் இறுதி போட்டிகள் இல்லாமல், நேரடியாக லீக் சுற்றில் முடிவில் அரை இறுதிக்கு அணிகள் தேர்வு செய்யப்படுகின்றன.
தொடரில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணிக்கும் லீக் சுற்றில் மொத்தம் ஒன்பது போட்டிகள் இருக்கின்றது. இதன் காரணமாக இந்த முறையில் நடத்தப்படும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மிக நீண்டதாக இருக்கும். ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் குறைந்தபட்சம் அவர்களுடைய அணி 9 போட்டிகள் விளையாடும் என்பது மகிழ்ச்சியான செய்தி!
தற்சமயம் உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் இசான் கிஷான் இருவரும் இளம் வீரர்களாக இருக்கிறார்கள். இதற்கு அடுத்து முகமது சிராஜ் மற்றும் சர்துல் தாக்கூர் இருப்பார்கள். அணியில் மீதமுள்ள அனைவரும் உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிய நல்ல அனுபவம் கொண்டவர்கள்.
உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் 15 வீரர்களில், இந்த முறை ஒரு வீரர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது கூடுதல் தகவல். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக வீரர் இல்லாமல் உலகக் கோப்பைக்கு ஒரு இந்திய அணி செல்கிறது.
தற்பொழுது இதுகுறித்து இந்திய அணி மற்றும் தமிழக வீரர் நடராஜன் கூறும் பொழுது ” உலகக் கோப்பைக்கு நல்ல ஒரு அணியை தேர்வு செய்து இருக்கிறார்கள். இந்த அணி வெல்லும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மிக முக்கியமாக உள்நாட்டில் உலகக் கோப்பை தொடர் நடக்க இருப்பது இந்திய அணிக்கு சாதகமான விஷயம்.
இங்குள்ள ஆடுகளங்கள் மற்றும் சூழ்நிலைகள் எப்படியானதாக இருக்கும்? என்று இந்திய வீரர்களுக்கு மிக நன்றாக தெரியும். இது உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணிக்கு மிகவும் உதவியானதாக இருக்கும். தற்பொழுது இந்திய அணியை இளம் வீரர்களைக் கொண்டு உருவாக்குகிறார்கள். இது மிகவும் நல்ல விஷயம்.
இந்த உலகக்கோப்பை தொடரில் தமிழக வீரர்கள் யாரும் இல்லை என்பதுதான் உங்களைப் போலவே எனக்கும் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அஸ்வின் அண்ணா இருந்திருக்க வேண்டும். அவர் இல்லாதது எனக்கு வருத்தமாக இருக்கிறது.
இந்த உலகக் கோப்பையை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் உள்நாட்டு சாதகம் இந்திய அணிக்கு இருக்கிறது, மற்றபடி எல்லா அணிகளுமே நல்ல போட்டியளிக்க கூடிய அணிகள்தான். எனவே சின்ன அணி என்று உலகக் கோப்பைக்கு வரும் அணிகளை நாம் சொல்ல முடியாது. அவர்கள் நல்ல தயாரிப்புகளோடு வருவார்கள்!” என்று கூறியிருக்கிறார்!