“ஆட்டத்தை மாற்றுமா இந்தியா? தரமான பதிலடி கொடுத்த ஆஸ்திரேலிய அணி! பேட்டிங்கிலும் ஆதிக்கம் தொடர்கிறது”! முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 49 ரன்கள் முன்னிலை!

0
486

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பையின் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. முதலில் ஆடிய இந்திய அணி ஆஸ்திரேலியா அணியின் அபார பந்து வீச்சினால் 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் கொன்னுமேன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளையும் நேதன் லியான் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்திலேயே ட்ராவஸ் ஹெட் விக்கெட்டை இழந்தாலும் உஸ்மான் கவஜா மற்றும் மார்னஸ் லபுசேன் ஆகியோர் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தனர்.லபுசேன் பூஜ்ஜியத்தில் இருந்தபோது ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார் . ஜடேஜா அதை நோபால் ஆக வீசியதால் அதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழக்கவில்லை.

- Advertisement -

இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடியாக இவர்கள் இருவரும் இணைந்து 96 ரன்களை எடுத்தனர். அணியின் எண்ணிக்கை 108 ஆக இருந்தபோது ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் லபுசேன். அவர் 31 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் சிறப்பாக ஆடிய உஸ்மான் கவாஜா இந்தத் தொடரில் தனது இரண்டாவது அரை சதத்தை பதிவு செய்தார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் இந்தத் தொடரில் மிகச் சிறப்பாக ஆடிவரும் வீரர் இவர் தான். 61 ரன்களில் இவரும் ஜடேஜாவின் பந்துவீச்சில் சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன் பிறகு ஆட வந்த கேப்டன் ஸ்மித் வேகமாக ரன் குவிக்கும் எண்ணத்துடனே ஆடினார். 26 ரன்களை எடுத்து இருந்தபோது இவர் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு பீட்டர் ஹான்ஸ்கம் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 156 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடே ஜா 63 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணி இந்த டெஸ்ட் போட்டியில் 49 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. மேலும் அந்த அணியின் கைவசம் 6 விக்கெட் இருக்கின்றன. இதனால் முதல் இன்னிங்ஸில் மிகப்பெரிய ரன்கள் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இந்திய அணியும் நாளை புதிய திட்டங்களுடன் களம் இறங்கி ஆஸ்திரேலியா அணியை விரைவாக ஆல் அவுட் செய்ய முயற்சி செய்யும். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாகவே இந்த டெஸ்ட் போட்டி அமைந்திருக்கிறது. இந்திய அணி எவ்வாறு பதிலடி கொடுக்கிறது என்பதை பொறுத்து தான் இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றி தோல்வி முடிவு செய்யப்படும்.

- Advertisement -