இந்திய கிரிக்கெட்டில் வெளியே விளம்பரங்கள் மூலமாக ஸ்பான்சர்ஷிப்புகள் மூலமாக மிகப்பெரிய அளவில் சம்பாதித்த வீரராக முதலில் உருவெடுத்தவர் சச்சின் டெண்டுல்கர்தான். அவர் பக்கத்தில் அப்பொழுது உலக கிரிக்கெட்டில் ஒருவர் கூட கிடையாது!
இதற்கு அடுத்து கிரிக்கெட் மிகப்பெரிய வணிக ரீதியான விளையாட்டாக மாற மாற, கிரிக்கெட்டுக்கு வெளியே இருந்து வீரர்களுக்கு பணம் விளம்பரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலமாக கிடைக்க ஆரம்பித்தது.
இதில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து மிகப்பெரிய அளவில் சம்பாதித்தவர் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி. சமீபத்தில் அவரது சொத்து மதிப்பு ஆயிரம் கோடியை தாண்டி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
அதேபோல மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இந்தியாவிலிருந்து கிரிக்கெட்டுக்கு வெளியே நிறைய சம்பாதித்த கிரிக்கெட் வீரராக விராட் கோலி உருவானார். அவருடைய சொத்து மதிப்பையும் ஆயிரம் கோடியை தாண்டி வளர்ந்து கொண்டு இருப்பதாக செய்திகள் வந்தது.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஒரு பதிவுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லயோனல் மெஸ்ஸி இருவருக்கும் அடுத்து மூன்றாவதாக அதிகமாக ஒரு பதிவுக்கு பணம் வாங்கக் கூடியவராக விராட் கோலி இருக்கிறார், அவர் ஒரு பதிவுக்கு 11.5 கோடி வாங்குகிறார் என்ற தகவல் சமீபத்தில் பரவி இருந்தது.
இந்த நிலையில் இன்று விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதற்கான மறுப்பை தெரிவித்திருக்கிறார். அதில் அவர் குறிப்பிடும் பொழுது “வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நன்றி உள்ளவனாக கடமைப்பட்டவனாக இருக்கிறேன். ஆனால் நான் சமூக வலைதளத்தில் ஒரு பதிவுக்கு வாங்கும் பணம் தொடர்பாக செய்திகள் உண்மையல்ல என்று சொல்லிக் கொள்கிறேன்!” என்று ட்விட் செய்திருக்கிறார். இதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நேற்று விராட் கோலி பேசும்பொழுது “நான் என்னுடைய கடந்த கால வெற்றிகள் மற்றும் கற்றுக் கொண்டவைகளில் இருந்து உத்வேகம் பெறுகிறேன். நான் சிறந்த முறையில் செயல்பட்ட தருணங்களை நினைப்பதும், இழப்புகளில் இருந்து நான் முன்னேறக்கூடிய பகுதிகளை பகுப்பாய்வு செய்வதும், ஒரு வீரராக நான் வளர உதவுகிறது. ஒவ்வொரு பின்னடைவும் நான் மீண்டு வருவதற்கான சிறப்பான வாய்ப்பாக அமைகிறது.
என்னை எப்பொழுதும் சிறந்த மனிதனாக வைத்திருப்பது என்னுடைய திறமைதான். மக்களுக்கு எப்பொழுதும் தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் முடிவுகள் இருக்கும். ஆனால் நான் எனது உள்ளுணர்வை நம்பவும், எனது திறன்களில் நம்பிக்கை கொள்ளவும் கற்றுக் கொண்டேன். இந்த தன்னம்பிக்கைதான் எனக்கு களத்தில் கிடைத்த சாதனைகளுக்கு உந்து சக்தியாக இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!
While I am grateful and indebted to all that I’ve received in life, the news that has been making rounds about my social media earnings is not true. 🙏
— Virat Kohli (@imVkohli) August 12, 2023