நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் மேக்ஸ்வெல் அடித்த இரட்டை சதம் கிரிக்கெட் உலகில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது!
292 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி தனது முதல் ஏழு விக்கெட்டை 91 ரன்களில் இழந்தது.
இப்படியான நிலையில் கேப்டன் கம்மின்சை உடன் வைத்துக்கொண்டு அதிரடியாக விளையாடி 128 பந்துகளில் 201 ரன்கள் குவித்து, 202 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆச்சரியமான முறையில் ஆஸ்திரேலிய அணியை மேக்ஸ்வெல் வெல்ல வைத்தார்.
இதில் குறிப்பிடும் விஷயமாக அவர் சதம் அடித்ததற்கு பிறகு கடுமையான தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டார். இதனால் மைதானத்திற்கு ஆஸ்திரேலியா மருத்துவக் குழு இரண்டு மூன்று முறை வரவேண்டியதாக இருந்தது.
ஆனாலும் சிறிது ஓய்வெடுத்த மேக்ஸ்வெல் இறுதிவரை களத்தில் நின்று ஆட்டத்தை முடித்தார். அவர் காயத்தின் காரணமாக களத்தை விட்டு வெளியேறவில்லை.
அதே சமயத்தில் மேக்ஸ்வெல் ஏன் பை ரன்னர் வைத்துக் கொள்ளவில்லை என்கின்ற கேள்வி நிறைய ரசிகர்களுக்கு இருக்கிறது. அப்படி வைத்திருந்தால் அவர் நிறைய ரன்களை ஓடாமல் இருந்து எடுத்திருக்க முடியும் என்பதான கருத்துகளும் இருக்கிறது.
2003 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சச்சினுக்கு ஷேவாக் பை ரன்னராக இருந்தார். 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்களாதேஷுக்கு எதிராக சேவாக்குக்கு கௌதம் கம்பீர் பை ரன்னராக இருந்தார்.
ஆனால் 2011 ஆம் ஆண்டில் கிரிக்கெட் விதிகளில் ஒரு முக்கிய மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதாவது ஒரு வீரர் காயம் அடைந்தால் அவர் பேட்டிங் செய்யும்பொழுது பை ரன்னர் வைத்துக் கொள்ள இனி முடியாது என்று விதி திருத்தப்பட்டது. காரணம், வீரர்களின் திறன் மேம்பாடு மற்றும் உடல் தகுதியை அதிகரிக்க இவ்வாறான விதியை ஐசிசி கொண்டு வந்தது.
உலக கிரிக்கெட்டில் 12 ஆண்டுகளாக பை ரன்னர் வைப்பது நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே மேக்ஸ்வெல் நேற்று பை ரன்னர் வைத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!