கிரிக்கெட் டி20 தொடர்களில் உலகத்தின் நம்பர் ஒன் டி20 தொடராக இருப்பது, இந்திய கிரிக்கெட் வாரியம் உள்நாட்டில் நடத்தும் ஐபிஎல் தொடர்தான். வீரர்களின் சம்பளம், வீரர்களுக்கான வசதிகள், பயிற்சி வசதிகள், பாதுகாப்பு வசதிகள், போட்டி நடத்தப்படும் தரம், வருமானம் என்று ஐபிஎல் இன்று உலக அளவில் முதல் இடத்தில் நிற்கிறது!
இப்படியான ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நாளை மறுநாள் கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் நடக்க இருக்கிறது. மெகா ஏலம் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவில் இந்த மினி ஏலமும் முக்கியமானது. மெகா ஏலத்தில் சரியான அணி கலவை அமையாத இடங்களுக்குச் சரியான வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும். எனவே ஒவ்வொரு அணியும் தங்களின் குறையை நிவர்த்தி செய்ய இந்த ஏலத்திற்கு என தனித்திட்டத்தோடு வரும்!
நடக்கவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் இந்திய வீரர் மயங்க் அகர்வால், இங்கிலாந்தின் பென் ஸ்டாக்ஸ், சாம் கரன், ஹாரி புரூக்ஸ், ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் போன்றோர் மிக முக்கிய வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள்!
ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணியைப் பொறுத்தவரை எப்பொழுதும் மற்றவர்கள் எதிர்பார்க்காத ஆனால் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வீரரை கணித்து வாங்குவது அந்த அணியின் தனிச்சிறப்பு. இந்த வகையில் இந்த முறை அப்படியான ஒரு வீரரை சென்னை அணி வாங்கும் என்று நம்பப்படுகிறது.
இதுகுறித்து கசியும் செய்திகளில் பெரும்பாலும் சென்னை அணி வாங்க அதிக வாய்ப்புள்ள வீரராக வருபவர், இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் நாயகனாகவும் இறுதியாட்டத்தின் ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இளம் வீரர் சாம் கரன்!
புதிய பந்தில் ஸ்விங் செய்யவும், ஆட்டத்தின் கடைசியில் பந்து வீசவும், இதேபோல் ஆட்டத்தில் நடுவரிசை அல்லது கீழே பேட்டிங்கில் பங்களிப்பு செய்யக் கூடியவராகவும் இவர் இருப்பது தனிச்சிறப்பு. எனவே எப்படியும் ஆட்டத்தில் இவரது பங்கு இருந்தே தீரும். இந்தக் காரணத்தால் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நடக்கவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் இந்த ஒரு வீரரை எப்படியும் வாங்க வேண்டும் என்று கூறியிருப்பதாக தகவல்கள் தெரிய வருகிறது!
இந்த முறை நடக்கவுள்ள மினி ஏலம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டி வருவதால், சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் ஏலத்தில் நேரடியாக கலந்து கொள்ள மாட்டார் என்று சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்வார் என்று தெரிகிறது!