ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் போட்டிகள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் எஞ்சிருக்கும் போட்டிகளை எங்கு நடத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வாரம் மட்டும் தான் ஐபிஎல் போட்டிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் போட்டிகள் தொடங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரை தங்களது நாட்டில் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறது. ஒருவேளை ஐபிஎல் இங்கிலாந்தில் நடந்தால் அது பல நன்மைகளை இந்திய அணி வீரர்களுக்கு தரும். அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.
இந்திய வீரர்களுக்கு பயிற்சி:
இங்கிலாந்தில் தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதில் பல இளம் வீரர்கள் விளையாட போகிறார்கள். இந்த தொடருக்கு முன்பு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றால் அங்கு இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்வதோடு மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து அறிய முடியும்.
டெஸ்ட் போட்டிக்கு முன்பு டி20 போட்டி ஒரு பயிற்சியாக தெரியாது என்றாலும் மனதளவில் நாம் இங்கிலாந்து ஆடுகளத்தில் விளையாடி ரன் குவித்திருக்கிறோம் என்ற நம்பிக்கை ஏற்படும். மேலும் கள சூழல் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்ள முடியும். இதேபோன்று பவுலர்கள் எப்படி வந்து வீச வேண்டும். எந்த லைன் மற்றும் லென்தில் பந்தை வீச வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வார்கள்.
இளம் வீரர்கள் திறமையை அறியலாம்:
இது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படும். இதே போன்று ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானங்களில் விளையாடி இருக்கிறார்கள். தற்போது வேகப்பந்து வெற்றி மற்றும் ஸ்விங் பந்துக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்த இளம் வீரர்கள் விளையாடினால் அவர்களுடைய உண்மையான திறமை வெளிப்படும்.
இதையும் படிங்க: கேப்டன் பதவி.. மீண்டும் விராட் கம்பீர் பிரச்சனை.. கோலி ஓய்வுக்கான பின்னணி காரணம் – வெளியான தகவல்கள்
மேலும் இவ்வளவு இளம் வயதிலேயே இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் நிச்சயம் அவர்களுக்கு கை கொடுக்கும். இதனால் போட்டியை வெளிநாட்டில் நடத்துவது என்பது சிறப்பான முடிவாக இருக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுவரை ஐபிஎல் தொடர் தடைபட்ட போதெல்லாம் தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.