நாளை கொழும்பு மைதானத்தில் இலங்கை இந்தியா அணிகள் மோதிக்கொள்ளும் மூன்று பொட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் மூன்றாவது அணியாக மழையும் இணைந்து கொள்ளும் அபாயம் தற்பொழுது ஏற்பட்டு இருக்கிறது. இதனால் இலங்கை அணிக்கு ஒரு அதிர்ஷ்டமும் காத்திருக்கிறது.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த தொடரின் மூன்று போட்டிகளும் கொழும்பு மைதானத்தில் மட்டுமே நடக்கின்றன.
எனவே முதல் போட்டியில் விளையாடிய சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான அதே ஆடுகளமாக கூட இரண்டாவது போட்டிக்கும் இருக்கலாம். இல்லை வேறு ஆடுகளம் கொடுக்கப்பட்டாலும் அதுவும் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாகத்தான் இருக்கும். எனவே ஆடுகளத்தில் எந்தவித பெரிய மாற்றங்களும் இருக்கப் போவதில்லை.
முதல் போட்டி டையில் முடிவடைந்து இருக்கின்ற காரணத்தினால் இந்திய அணி தொடரை வெல்ல வேண்டுமென்றால் அடுத்த இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும். ஒருவேளை அடுத்த போட்டி மழையால் கைவிடப்பட்டால், இந்திய அணி மூன்றாவது போட்டியை வென்றாக வேண்டும்.
அதே சமயத்தில் இந்திய அணி இரண்டு போட்டிகளையும் இந்திய அணிக்கு எதிராக வென்று தொடரை கைப்பற்றுவது கடினம், அதே சமயத்தில் நாளை போட்டி மழையால் கைவிடப்பட்டால், ஊரு போட்டியை மட்டும் வென்று தொடரை கைப்பற்றுவது இலங்கை அணிக்கு இப்போதைக்கு எளிதான விஷயம். எனவே நாளை மழையால் போட்டி கைவிடப்பட்டால் அது இலங்கை அணிக்கு சாதகமான விஷயமாக அமையும்.
நாளை போட்டிக்கு முன்பாக மதியம் 12 மணி அளவில் 38% மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என வானிலை அறிக்கை கூறுகிறது. அதே சமயத்தில் மாலை நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு 41% முதல் 63 சதவீதம் என அதிகரிக்கிறது. இதன் காரணமாக போட்டியில் மூன்றாவது அணியாக மழையும் கலந்து கொள்ளும் அபாயம் உருவாகி இருக்கிறது. இது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக இல்லை.
இதையும் படிங்க : கம்பீர் என்ன செய்யப் போறீங்க.. 5 போட்டி மட்டுமே இருக்கு.. எல்லாம் அவ்வளவுதானா? – ஆகாஷ் சோப்ரா கவலை
1997 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது கிடையாது. மேலும் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் இந்திய அணி இதுவரை 99 போட்டிகளில் வென்று இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் எந்த ஒரு அணியும் இன்னொரு அணிக்கு எதிராக 100 போட்டிகளை வென்றது கிடையாது. இந்திய அணிக்கு இந்த இரண்டு பெருமைகளையும் மழை கெடுக்க வாய்ப்புகள் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது!






