“சூர்யா யாருன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்!” – வெற்றி கேப்டன் ரோகித் சர்மா பெருமிதம்!

0
24934
Rohitsharma

எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் ராகுல் டிராவிட் பயிற்சியில் அரை இறுதி சுற்றை எட்டி இருக்கிறது!

இன்று அதிகாலையில் நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைய, அந்தத் தோல்வியால் இந்திய அணி நேரடியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது!

- Advertisement -

இதை அடுத்து இன்றைய நாளின் மற்றும் இந்த உலகக் கோப்பை தொடரின் பிரதான சுற்றின் கடைசிப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை எதிர்த்து விளையாடி இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் வெறும் 25 பந்துகளை மட்டுமே சந்தித்து ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் மைதானத்தின் நான்கு புறங்களிலும் விளாசி 61 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் இந்திய அணி 186 ரன்கள் குவித்து, ஜிம்பாப்வே அணியை 115 ரன்கள் சுருட்டி அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ” அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தது இந்த போட்டியில். நாங்கள் தேடிக் கொண்டிருந்த ஒன்று இது. நாங்கள் தற்போது தகுதி பெற்றுள்ளோம். நாங்கள் எங்கள் வழியில் வெளியில் வந்து சுதந்திரமாக விளையாட விரும்பினோம். நாம் அதை அடைந்திருக்கிறோம் ” என்று கூறினார்…

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய ரோஹித் சர்மா ” சூரியகுமார் யாதவ் இந்திய அணிக்கு என்ன செய்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மிகச் சிறப்பான முறையில் தைரியமாக வெளியே வந்து விளையாடியது மூலம் மற்றவர்களின் ரன் அழுத்தத்தை குறைக்கிறார். அவருடைய திறன் என்ன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இது இன்னொருவர் தன் விருப்பத்திற்கு விளையாட உதவியாக இருக்கிறது. அவர் பேட்டிங் செய்யும்பொழுது டக் அவுட் மிகவும் திருப்தியாக இருக்கும். அவர் பேட் செய்கையில் மிகவும் நிதானமாகவும் இருக்கிறார். அவரிடம் நாங்கள் இதை எதிர்பார்த்தோம். அவர் தற்போது வேறு ஒரு லெவலுக்கு சென்று விட்டார்” என்று புகழ்ந்து கூறினார்.

அடுத்து விளையாட இருக்கும் அரையிறுதி ஆட்டம் பற்றி பேசிய அவர்
” நாங்கள் அடுத்துள்ள நிலைமைகளுக்கு சீக்கிரம் எங்களை தயார் செய்து கொள்வது முக்கியம். நாங்கள் அரை இறுதி விளையாட இருக்கும் அடிலைடு மைதானத்தில் ஒரு போட்டியில் விளையாடியிருக்கிறோம். ஆனாலும் நாங்கள் அதற்குள்ளான சூழ்நிலைக்கு எங்களை விரைவாக தயார் செய்ய வேண்டும். இங்கிலாந்து ஒரு நல்ல அணி எனவே போட்டி சிறந்ததாக அமையும். முதலில் நாம் தகுதி பெற்றதற்கு பெருமை கொள்ள வேண்டும். நாங்கள் இன்னொரு போட்டி நன்றாக விளையாடினால் இறுதிப்போட்டியில் இருப்போம். இந்த நேரத்தில் ரசிகர்கள் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். நாங்கள் போகும் எல்லா இடங்களிலும் வந்து மைதானத்தை நிரப்பினார்கள். அரை இறுதிப் போட்டிகளும் அதையே தொடர்வார்கள் என்று நான் நம்புகிறேன் ” என்று கூறியுள்ளார்!