ஜெயிக்க முடியாதுன்னு தெரிஞ்சிருச்சு.. கொஞ்சம் தள்ளிப்போடுவோம் அப்டின்னு தான் ஆடினோம்; நான் போட்டியை இழந்தது இந்த இடத்தில் தான் – நிதிஷ் ராணா பேட்டி!

0
331

பவர்-பிளே ஓவர்களில் நிறைய ரன்கள் விட்டுக்கொடுத்தபோதே தெரிந்துவிட்டது போட்டியில் வெல்வது கடினம் என்று. ஆகையால் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்வோம் என்று ஆடினோம் என போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்துள்ளார் நிதிஷ் ராணா!.

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் அடித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக ஜேசன் ராய் 43 ரன்கள், ரஸ்ஸல் 38 ரன்கள் அடித்திருந்தனர். இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், அக்ஸர் பட்டேல், நார்க்கியா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

128 ரன்கள் இலக்கை துரத்திய டெல்லி அணி பவர்-பிளேவில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 61 ரன்கள் அடித்தது. நன்றாக ஆரம்பித்த டெல்லி இந்த இலக்கை விரைவாக எட்டி சிறப்பான ரன்ரேட்டில் வெற்றியை பெறுவார்கள் என எதிர்பார்த்த போது, மிடில் ஆர்டரில் வரிசையாக விக்கெட்டுகள் இழந்தனர்.

ஓபனிங்கில் நன்றாக விளையாடிக்கொடுத்த டேவிட் வார்னரும் தவறான நேரத்தில் 57 ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினார். மனிஷ் பாண்டே 21 ரன்கள் அடித்து அவரும் இறுதிவரை நிலைத்து நிற்காமல் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அக்ஸர் பட்டேல் சரியான நேரத்தில் பொறுப்பை எடுத்துக்கொண்டு அவசரப்படாமல் ஆட்டத்தை கடைசி ஓவர்வரை எடுத்துச் சென்று வெற்றி பெற்றுக் கொடுத்தார். 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் அடித்தது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

இறுதியாக நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியை இழந்த கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பேசுகையில்,

“நாங்கள் பேட்டிங்கில் 15-20 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம் என்று நினைக்கிறேன். இதற்காக நான் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். களத்தில் நின்று விளையாடி கொடுத்திருக்க வேண்டும். இன்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள்.

டெல்லி அணியினர் பவர்-பிளே ஓவர்களில் விரைவாக ரன்களை குவித்து விட்டார்கள். அந்த இடத்திலேயே நாங்கள் தோல்வி தழுவி விட்டோம். அதன் பிறகு ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்வோம் என்று அவர்களது வெற்றியை தாமதம் செய்தோம். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் ஒட்டுமொத்த அணியாக செயல்பட வேண்டும். இன்றைய போட்டியில் பந்துவீசியது போலவே அடுத்தடுத்த போட்டிகளிலும் நன்றாக செயல்பட வேண்டும். இப்படி செயல்பட முனைந்தால் எப்பேர்பட்ட போட்டிகள் என்றாலும் நம்மால் வெற்றி பெறமுடியும்.” என்றார்.