பேட்டிங் ஒழுங்காவே ஆடலையே ஜெயிக்க முடியுமான்னு யோசிச்சிகிட்டே இருந்தேன், எப்படியோ 2 பாயின்ட்ஸ் கெடச்சிருச்சு – வெளிப்படையாக பேசிய வார்னர்!

0
737

பேட்டிங்கில் ஒழுங்காகவே செயல்படவில்லை ஆனாலும் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகள் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பேசியுள்ளார் டேவிட் வார்னர்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

- Advertisement -

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழந்து தட்டுதடுமாறி 144 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அக்சர் பட்டேல், மனிஷ் பாண்டே இருவரும் தலா 34 ரன்கள் அடித்திருந்தனர். மிச்சல் மார்ஷ் 25 ரன்கள், டேவிட் வார்னர் 21 ரன்கள் அடித்திருந்தனர்.

ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சில் அசத்திய வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் இரண்டு விக்கெட்களும் கைப்பற்றினர். இதில் புவி எகானாமி 2.75 மட்டுமே ஆகும்.

இந்த இலக்கு மிகவும் எளிதானது. சொந்த மைதானத்தில் இதை கடந்து விட முடியும் என்கிற எதிர்பார்ப்புடன் ஹைதராபாத் அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை. மிடில் ஆர்டரிலும் எவரும் அடிக்க வேண்டும் என்று முனைப்பு காட்டவில்லை.

- Advertisement -

நன்றாக ஆடிவந்த மயங்க் அகர்வால் 49 ரன்கள், சற்று நம்பிக்கை அளித்து வந்த கிளாஸன் 19 பந்துகளில் 31 ரன்கள் அடிக்க, மற்ற வீரர்கள் சொற்பரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அழுத்தம் ஹைதராபாத் அணியின் பக்கம் திரும்பியது.

கடைசி வரை போராடிய வாஷிங்டன் சுந்தர் 24 ரன்கள் அடித்திருந்தார், பினிஷ் செய்துகொடுக்க இயலவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது ஹைதராபாத் அணி. இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றியும் பெற்றது.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த வெற்றி பெற்ற அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில்,

“மைதானத்தில் எங்களுக்கும் சப்போர்ட் குறைவே இல்லாமல் இருந்தது. பேட்டிங்கில் நாங்கள் சரியாக செயல்படவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டதினால் இரண்டு புள்ளிகள் கிடைத்ததில் மகிழ்ச்சி.

இந்த அழுத்தமான சூழலில் முகேஷ் மிகச் சிறப்பாக பந்துவீசினார். அத்துடன் இரண்டு ஸ்பின்னர்கள் எங்களுக்கு தூணாக விளங்குகிறார்கள். அதிக அனுபவம் பெற்றவர்களாக இருப்பதால் ஒருபோதும் அவர்கள் அணியை கைவிடுவதில்லை. நாங்கள் தோல்வியை தழுவிய போட்டியிலும் ஸ்பின்னர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.

இஷாந்த் சர்மாவிற்கு நேற்று முன்தினம் உடல்நிலை சரி இல்லை. அவரால் விளையாட முடியுமா என்று எண்ணிக் கொண்டிருந்தபோது, அவரே என்னிடம் வந்து நான் விளையாடுகிறேன் என்று பேசினார். இந்த ஐபிஎல் தொடரில் வருவதற்கு அவர் கடின உழைப்பை போட்டு இருக்கிறார் என்று தெரியும். அந்த நம்பிக்கையை அப்படியே போட்டியிலும் எடுத்துக் கொடுத்தார்.

தொடர்ந்து ஐந்து போட்டிகளை இழந்த பிறகு நான் கூறியது போல, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெறுவோம் என்றேன். அந்த நம்பிக்கை இன்னும் இருக்கிறது. அடுத்த போட்டியிலும் வெற்றி பெறுவோம்.” என்றார்