நடப்பு ஆண்டு 2024 ஜூன் மாதம் ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கு கடந்த வாரம் 15 பேர் கொண்ட இந்திய அணி அஜித் அகர்கர் தலைமையில் அறிவிக்கப்பட்டது. இதிலிருந்து இந்திய பேட்டிங் ஆர்டரை எப்படி அமைக்கலாம் என மேத்யூ ஹைடன் ஒரு புதிய யோசனையை கூறி இருக்கிறார்.
தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் டி20 உலகக்கோப்பை அணியில் துவக்க வீரர்களுக்கான இடத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இளம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் என இருவர் மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அணியில் மூன்றாவது துவக்க ஆட்டக்காரர் அறிவிக்கப்படவில்லை.
அதே சமயத்தில் மூன்றாவது துவக்க ஆட்டக்காரர்களுக்கான இடத்தில் விராட் கோலி மற்றும் இரண்டாவது விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டிருக்கும் சஞ்சு சாம்சன் இருவருமே சரியாக இருப்பார்கள். இந்த காரணத்தினால் மூன்றாவது துவக்க ஆட்டக்காரருக்கான இடத்தை இந்தியத் தேர்வுக்குழு வீண் செய்யவில்லை.
மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் துவக்க ஆட்டக்காரராக வரவேண்டும் என வெளியிலிருந்து நிறைய பேச்சுகள் இருக்கிறது. இப்படி இவர்கள் இருவரும் வரும்பொழுது ஜெய்ஸ்வால் தன்னுடைய இடத்தை அணியில் இழப்பார். ஆனால் மேற்கொண்டு பிளேயிங் லெவனை அமைக்கும் பொழுது சஞ்சு சாம்சனுக்குதான் இடம் தர முடியும். ரிஷப் பண்ட்டும் அணியில் இருப்பார். எனவே இவர்கள் இருவருக்கும் இவர்களுக்கு வழக்கமான இடத்தை கொடுக்க முடியாது.
இன்னொரு பக்கத்தில் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் துவக்க வீரர்களாக வந்தால் விராட் கோலி மூன்றாவது இடத்திற்கு இறங்குவார். அதிரடி ஆட்டக்காரர்கள் சூரியகுமார் மற்றும் சிவம் துபே போன்றவர்களுக்கு விளையாடுவதற்கு நிறைய பந்துகள் கிடைப்பது கடினமாக மாறும். விராட் கோலியும் பவர் பிளே தாண்டி வந்தால் விளையாடுவதற்கு கடினமாக இருக்கும். இப்படி சில சிக்கல்கள் பிளேயிங் லெவன் அமைப்பதில் இருக்கிறது.
இதையும் படிங்க : நான் கட்டின கோயில் மும்பை இந்தியன்ஸ்.. இதுதான் கடைசி.. குமுறிய ரோகித் சர்மா.. வீடியோவை டெலிட் செய்த கேகேஆர்
தற்பொழுது இதற்கு தீர்வளிக்கும் விதமாக பேசியிருக்கும் மேத்யூ ஹைடன் கூறும் பொழுது “விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வாலுடன் இந்திய அணி ஓபனிங் செய்தால் நான் மகிழ்ச்சி அடைவேன். சூரியகுமார் யாதவை மூன்றாவது இடத்தில் களம் இறக்கலாம். கேப்டன் ரோகித் சர்மாவை நான்காவது இடத்திற்கு கொண்டு வரலாம். விராட் கோலி பவர் பிளேவில் மாஸ்டர் போல விளையாடுவார். பவர் பிளே முடிந்து ஃபீல்டர்கள் வெளியில் செல்லும் பொழுது ரோகித் சர்மா பொறுப்பை எடுத்துக் கொள்ள முடியும். மேலும் அவர் அந்த இடத்தில் சிறப்பாக விளையாடியும் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார். இந்த யோசனை இந்திய அணிக்கு நல்ல ஒன்றாகவே தெரிகிறது