நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாட ஆஸ்திரேலியா அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று நாக்பூர் மைதானத்தில் துவங்கியது!
இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தார். ஆடுகளம் குறித்த அறிக்கையில் முழுக்க முழுக்க சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று சொல்லப்பட்டு இருந்தது. இந்திய அணியில் கே எஸ் பரத் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் அறிமுகமானார்கள். ஆஸ்திரேலியா அணியில் சுழற்பந்துவீச்சாளர் டாட் மர்பி அறிமுகமானார்.
ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கம் தர இடது கை ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவஜா இருவரும் களமிறங்கினார்கள். இவர்களது இருவரது விக்கட்டையும் பறிக்கும் நோக்கத்தில் இந்திய அணி வெகு சீக்கிரத்தில் அஸ்வினை களம் இறக்கும் என்று கிரிக்கெட் வர்ணனையில் இருந்தவர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
ஆனால் ஆடுகளம் பற்றிய முடிவோ கிரிக்கெட் வர்ணனையாளர்களின் எதிர்பார்ப்போ எல்லாவற்றையும் தாண்டி ஆடுகளத்தில் ஆச்சரியங்கள் நிகழ ஆரம்பித்தது. சிராஜ் தன் முதல் ஓவரை ஆட்டத்தின் இரண்டாவது ஓவராக வீசிய பொழுது, அதன் முதல் பந்தை இன் ஸ்விங் ஃபுல் லென்த்தாக வீச, கால் காப்பில் வாங்கிய கவாஜா மூன்றாவது நடுவரின் முடிவில் எல்பி டபிள்யு முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இதற்கு அடுத்து ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை வீசிய முகமது சமி டேவிட் வார்னருக்கு இரண்டு பந்துகளை வெளியே காட்டி மூன்றாவது பந்தை உள்ளே எடுத்து வந்து கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். எல்லோரும் சுழற் பந்துவீச்சை பற்றி பேசிக் கொண்டிருக்க இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் சத்தம் இல்லாமல் ஆஸ்திரேலியாவின் துவக்க ஆட்டக்காரர்களை வெளியே அனுப்பி ஆச்சரியத்தை தந்திருக்கிறார்கள். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!
What a start for India – Great bowling by Siraj & Shami and brilliant review taken by Captain Rohit. pic.twitter.com/VFbFmHwCLF
— CricketMAN2 (@ImTanujSingh) February 9, 2023