இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெறும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு டொமனிக்காவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 150 ரண்களுக்கு சுருண்டது. ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அறிமுக டெஸ்டில் விளையாடும் இளம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் இருவரும் மிக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்கள்.
இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 229 ரன்கள் சேர்த்து, இந்திய அளவில் வெளி மண்ணில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த துவக்க ஜோடி என்ற சாதனையை படைத்தது. மேலும் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 17 வது இந்தியராக ஜெய்ஷ்வால் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த போட்டியில் தற்பொழுது கேப்டன் ரோஹித் சர்மா 103 ரன்களிலும், மூன்றாவது இடத்திற்கு புதிதாக விளையாட வந்த சுப்மன் கில் 6 ரன்களிலும் வெளியேறி இருக்கிறார்கள். தற்பொழுது ஜெய்ஸ்வால் 143 ரன்களுடனும், விராட் கோலி 36 ரன்கள் உடனும் களத்தில் நிற்கிறார்கள்.
இந்த போட்டியில் விளையாட வந்த விராட் கோலிக்கு முதல் பவுண்டரி 81 வது பந்தில்தான் வந்தது. ஜோமன் வாரிகன் பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் விராட் கோலி இந்த பவுண்டரியை அடித்தார். அடித்து விட்டு தானே அந்த பவுண்டரியை கொண்டாடவும் செய்தார்.
ஏனென்றால் தற்பொழுது போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஆடுகளத்தில் பந்து திரும்புவதோடு பந்து மெதுவாகவும் வருகிறது. மேலும் அவுட் ஃபீல்டும் மிக மெதுவாக இருக்கிறது.
ஆடுகளத்தின் தன்மை காரணமாக பந்தை வேகமாக அடித்து ஆடவும் முடியாது, அப்படியே அடித்தாலும் அவுட் ஃபீல்டு காரணமாக பந்து பவுண்டரிக்கு போகாது. இதன் காரணமாகத்தான் விராட் கோலி நகைச்சுவையாக தான் அடித்த பவுண்டரியை தானே கொண்டாடினார்.
இன்று மூன்றாவது நாள் போட்டி வழக்கம் போல் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு துவங்க இருக்கிறது. மேற்கொண்டு விளையாடும் ஜெய்ஸ்வால், அறிமுக டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர், உலக அளவில் அதிக ரன்கள் எடுத்தவர் என்கின்ற சாதனைகளை நோக்கி போக மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் அவரை களத்தில் வழிநடத்த விராட் கோலியும் இருக்கிறார். எனவே இன்றைய ஆட்டம் சுவாரசியமான ஒன்றாக இருக்கும்!
Virat Kohli celebrating his first boundary of the innings.
— Johns. (@CricCrazyJohns) July 14, 2023
What a fantastic character.pic.twitter.com/f0DLJ8No4f