ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடிவத்தில், அணிகள் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, இந்திய உள்நாட்டு தியோதர் டிராபி தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் நேற்று மிக முக்கியமான ஒரு ஆட்டத்தில் வடக்கு மண்டல அணிக்கு எதிராக மேற்கு மண்டல அணி விளையாடியது. வடக்கு மண்டல அணிக்கு நிதிஷ் ராணா கேப்டன் ஆகவும், மேற்கு மண்டல அணிக்கு பிரியங்க் பன்சால் கேப்டன் ஆகவும் இருக்கிறார்கள்.
போட்டிக்கான டாசில் வென்ற வடக்கு மண்டல அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா 29, பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களில் வெளியேறினார்கள்.
இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் நிதிஷ் ரானா மற்றும் ஹிம்மன்சு ராணா இருவரும் தலா 54 ரன்கள் எடுத்து அரை சதம் அடித்து ஆட்டம் இழந்தார்கள். கடைசி வரிசையில் வந்த ரோகிலா 52 பந்தில் 56 ரன்கள் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் வடக்கு மண்டல அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்தது. மேற்கு மண்டல அணி சார்பில் முலானி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதற்கடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய மேற்கு மண்டல அணிக்கு ஹர்விக் தேசாய் 56, பிரியங்க் பன்சால் 14, ராகுல் திரிபாதி 3, ஸ்மார்த் வியாஸ் 25 ரன்களில் வெளியேற நெருக்கடி உருவானது.
இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த சிவம் துபே, கதன் படேல் ஜோடி பொறுப்பாக விளையாடியதோடு அதிரடியாகவும் விளையாடி, 48.5 ஓவரில் இலக்கை எட்டி மேற்கு மண்டல அணியை வெற்றி பெற செய்தது. சிவம் துபே ஆட்டம் இழக்காமல் 78 பந்துகளில் மூன்று பவுண்டரி 5 சிக்ஸர்கள் உடன் 83 ரன்கள் எடுத்தார். கதன் படேல் 85 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் ஆட்டம் இழக்காமல் 63 ரன்கள் எடுத்தார்.
தற்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இடது கை பேட்ஸ்மேன் சிவம் துபே மீது பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. என்னவென்றால் வருகின்ற பந்துகளுக்கு தகுந்தவாறு அவருடைய கால்கள் நகராது. எந்தப் பகுதியில் வீசப்படும் பந்தாக இருந்தாலும் நின்ற இடத்தில் இருந்து மட்டுமே விளையாடுவார். இது அவருடைய பெரிய குறையாக இருந்தது. இந்தக் குறையையும் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிறையாக மாற்றியது தனிவிஷயம்.
இந்தப் போட்டியில் சிவம் துபே பேட்டிங்கில் ஒரு வித்தியாசம் காணப்பட்டது. அவர் கால்களை நகர்த்தி பந்துகளுக்கு ஏற்றவாறு விளையாடினார். மேலும் தன்னுடைய நீண்ட கால் மற்றும் கைகளை பயன்படுத்தி நின்ற இடத்தில் இருந்து பந்தை அடிக்காமல், பந்துக்கு இறங்கி வந்து சிக்ஸருக்கு அடித்தார். இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சிவம் துபே பந்தை பலம் கொண்டு பவுண்டரி எல்லைக்கு வெளியே காற்றில் அடிக்கக்கூடிய திறமை கொண்டவர். தற்பொழுது இவர் கால்களை நகர்த்தி விளையாட ஆரம்பித்து இருப்பது இவரை இன்னும் ஆபத்தான பேட்ஸ்மேனாக மாற்றி இருக்கிறது. எனவே வருகின்ற ஐபிஎல் சீசன்களில் இவருடைய அதிரடி அதிகரித்து ரன்கள் சீராக வரலாம். இவர் சிஎஸ்கே அணியால் தக்கவைக்கப்படும் வீரராகவும் மாறலாம்.
BREAKING 🚨
— Yash (@CSKYash_) July 30, 2023
Shivam Dube has started using his feet while battingpic.twitter.com/fdS28nfr2K