தற்பொழுது 10 ஓவர்கள் வடிவத்தில் ஜிம்பாப்வே நாட்டில் டி 10 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்களான ராபின் உத்தப்பா மற்றும் ஸ்ரீசாந்த் இருவரும் ஜிம்பாபே நாட்டின் ஹராரே ஹரிகேன்ஸ் அணியில் விளையாடுகிறார்கள்.
இந்தத் தொடரில் மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் இரண்டு அணிகள் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த அணிகள். மீதம் இருக்கின்ற மூன்று அணிகள் தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அணிகள். எனவே இந்த தொடருக்கு ஜிம்பாப்வே ஆப்ரோ டி20 லீக் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று தென்னாபிரிக்க அணியான டர்பன் க்ளாண்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹராரே ஹரிகேன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த அணிக்கு கேப்டனாக இயான் மார்கன் இருக்கிறார்.
ஹராரே ஹரிகேன்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பா மற்றும் சக்ப்வா இருவரும் துவக்கம் தருவதற்கு களம் இறங்கினார்கள். இந்த ஜோடி டர்பன் அணியின் பந்துவீச்சை மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் சிதறடித்தது.
இந்த ஜோடி 6.2 ஓவர்களில் மட்டும் 92 ரன்கள் சேர்த்து அசத்தியது. இவ்வளவு நேரம் மட்டுமே களத்தில் நின்ற ராபின் உத்தப்பா 23 பந்தில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 53 ரன்கள் எடுத்து மிரட்டினார்.
பத்து ஓவர் போட்டி என்பதால் சந்திக்கும் எல்லா பந்துகளையும் அடிப்பதற்கு மட்டுமே பேட்ஸ்மேன்களிடம் முயற்சி காணப்பட்டது. ராபின் உத்தப்பா உடன் இணைந்து விளையாடிய சகப்வா 23 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 43 ரன்கள் அடித்தார். கடந்த போட்டியின் கதாநாயகன் டோனவன் பெரிரா 12 பந்தில் 24 ரன்கள் எடுக்க, 10 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு ஹராரே அணி 134 ரன்கள் குவித்தது.
பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய டர்பன் அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆண்ட்ரே ப்ளட்சர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 25 பந்துகளில் இரண்டு பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் உடன் 50 ரன்கள் எடுத்தார்.
இவருடன் இணைந்து விளையாடிய ஹசரத்துல்லா ஷசாய் 28 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த இருவரும் டர்பன் அணிக்காக அதிரடியாக விளையாடினாலும், இவர்களது அதிரடி இலக்கை எட்டுவதற்கு போதுமானதாக அமையவில்லை.
பத்து ஓவர்கள் முடிவில் டர்பன் அணியால் இரண்டு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதை அடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் ஹராரே அணி வெற்றி பெற்றது.
Robin Uthappa's quick fire Fifty in #ZimAfroT10pic.twitter.com/eGaXXX3POd
— Don Cricket 🏏 (@doncricket_) July 27, 2023
ஹராரே அணியில் இடம் பெற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் இரண்டு ஓவர்கள் பந்துவீசி 22 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதற்கு முன்பு நடந்த போட்டியில் இறுதி ஓவரா மிகச் சிறப்பாக வீசி அனுப்பி வெற்றி தேடித் தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.