இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு தயாரான நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் ருத்ராஜ் தலைமையிலான இந்திய இரண்டாம் கட்ட அணி சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் டி20 வடிவத்தில் கிரிக்கெட் தொடர் விளையாடி வருகிறது.
நேரடியாக காலிறுதி சுற்றில் இடம் பெற்ற இந்திய அணி நேபாள் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் இன்று பங்களாதேச அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாடியது.
இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் வெற்றி பெறும் அணி உடன் மோதும். இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் தற்போதைக்கு இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாக இருக்கிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய அணி பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியை 20 ஓவர் களுக்கு 9 விக்கெட் 96 ரன்கள் என்று எளிமையாகக் கட்டுப்படுத்தியது. தமிழகத்தின் சாய கிஷோர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டார்கள்.
இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறிவிட்டார். அடுத்து மூன்றாவது பேட்ஸ்மேனாக வந்த திலக் வர்மா இந்த ஆட்டத்தில் தன்னுடைய பழைய அதிரடியை மீண்டும் கொண்டு வந்து மிரட்டினார். 26 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 55 ரன்கள் எடுத்தார். ருத்ராஜ் ஒருமுனையில் 26 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி 9.2 ஓவரில் இந்திய அணியை எளிமையாக வெற்றி பெற செய்தது.
இந்த அரைசதத்தின் மூலம் இந்திய அணிக்கு குறைந்த வயதில் நாக்அவுட் போட்டியில் அரை சதம் அடித்தவர் என்ற சாதனையும் திலக் வர்மா படைத்திருக்கிறார்.
பும்ரா தலைமையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரிலும், தற்பொழுது ஆசிய விளையாட்டுப் போட்டியில் காலிறுதி சுற்றிலும் திலக் வர்மா எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. இதன் காரணமாக அவர் மீது கொஞ்சம் அழுத்தம் இருந்தது. இந்த நிலையில் அதிலிருந்து வெளிவந்து சிறப்பாக விளையாடி இருக்கிறார். மேலும் தன்னுடைய இடுப்பு பகுதியில் குத்தியுள்ள பச்சையைக் காட்டி தன்னுடைய அரை சதத்தை கொண்டாடினார். அதற்கான காரணத்தை தற்பொழுது கூறியுள்ளார்.
போட்டியில் வெற்றிக்குப் பிறகு பேசிய அவர் ” நான் ஒரு ஆல்ரவுண்டராக வர விரும்புகிறேன். நான் இரண்டு பெரிய லெஜெண்டுகளான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவருடனும் சேர்ந்து பயிற்சி பெற்றிருக்கிறேன்.
கடந்த சில போட்டிகள் எனக்கு சரியாக அமையவில்லை. நான் அந்த முறையில் கொண்டாடியது என் அம்மாவுக்காக. இப்பொழுது எல்லாம் சரியாகி விட்டது என்பதாக நான் அப்போது கூறினேன்!” என்று தெரிவித்திருக்கிறார்!