” எனக்கு இது மிகவும் உதவியது ” – இந்திய அணிக்கு எதிரான முதல் டி20யில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது குறித்து வான்டர் டசன் பேச்சு

0
91
Van der dussen and David Miller

கடந்த ஆண்டு இந்திய அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து, இரண்டு தொடரையும் 1-2, 0-3 என்று இழந்து வெறுங்கையோடு நாடு திரும்பியிருந்தது. விராட்கோலி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருந்தார்.

ஐ.பி.எல் முடிந்து தற்போது தென் ஆப்பிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியா வந்திருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டு, கே.எல்.ராகுல் கேப்டனாக்கப்பட்டு, அவரும் காயத்தால் வெளியேற ரிஷாப் பண்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இரவு ஏழு மணிக்குத் துவங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பந்து வீச்சை முதலில் தேர்வு செய்து, இந்திய அணியை பேட்டிங்கில் களமிறக்கி விட்டார்.

சிறப்பாக விளையாடிய இந்திய அணி இஷான் கிஷானின் 76 ரன்களோடும், ஹர்திக் பாண்ட்யாவின் இறுதிக்கட்ட அதிரடியில் வந்த 31 ரன்களோடும், இருநது ஓவர் முடிவில் 211 ரன்களை குவித்தது. அடுத்து தென் ஆப்பிரிக்க அணி 81 ரன்களுக்கு முக்கிய மூன்று விக்கெட்டுகளை இழக்க, டேவிட் மில்லர், வான்டர் டூ டசன் ஜோடி அமர்க்களமாய் 131 ரன்கள் சேர்த்து தென் ஆப்பிரிக்காவை வெற்றிபெற வைத்தது. 30 பந்தில் வான்டர் டூ டெசன் 29 ரன்களை அடித்திருந்த போது தந்த கேட்ச் வாய்ப்பை ஸ்ரேயாஷ் தவற விட, அடுத்த 16 பந்துகளில் 46 ரன்களை நொறுக்கி எடுத்து மொத்தம் 46 பந்துகளில் 75 ரன்களை குவித்துவிட்டார்!

ஆட்டம் முடிந்து பேசிய வான்டர் டூ டெசன் “நிச்சயமாக ஐ.பி.எல் எனக்கு உதவி இருக்கிறது. நான் நிறைய ஐ.பி.எல் போட்டிகளைப் பார்த்தேன். விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகம் கிடைக்கவில்லை. ஆனால் அவர்களது பந்துவீச்சாளர்கள் என்ன செய்வார்கள், நிலைமைகள் என்னவென்று நான் புரிந்திருந்தேன். இந்திய நிலைமைகள் தென் ஆப்பிரிக்காவிற்கு வேறானவை. நான் இங்க இரண்டு மாதங்கள் இந்த வெப்பத்தில் இருந்தேன். இங்குள்ள தட்பவெப்பம் எனக்கு பழகிவிட்டது. இதற்கு நான் பழகிவிட்டேன். இது அனைவருக்கும் பொதுவானது” என்றார்.

- Advertisement -

மேலும் உரையாடிய அவர் “ஹர்சலின் ஒரு நல்ல மெதுவான பந்து கிடைத்தது. பவுண்டரி தூரம் குறைவாய் இருந்ததால் அது எனக்கு வாகாய் சிக்கியது. அப்படியான பந்துகள் அடிக்க கடினமானது. அவர் அதில் திறமையானவர். ஆனால் அவரும் ஒரு மனிதர். அவரும் தவறுகள் செய்துதான் ஆகவேண்டும். ஒரு பேட்டராக நாம் வலிமையாக அந்தச் சூழலில் இருக்க வேண்டும். மேலும் அவர் நன்றாக வீசும் பந்தில் பொறுமையாகவும் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்!