பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ள நிலையில் , முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் . இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் 1983 ஆம் ஆண்டு இந்தியா அணி உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த மதன் லால் இந்த தோல்வி குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் .
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ‘மதன்லால்’ இந்திய வீரர்கள் போட்டிகளில் விளையாடும் போது தேசத்திற்காக ஆடுகிறோம் என்ற மனநிலையில் ஆடுவது போல் தெரியவில்லை ஏதோ கடமைக்கு ஆடுவது போல் ஆடி வருகின்றனர். தேசத்திற்காக ஆடுகிறோம் என்ற தீவிரமும் வேட்கையும் கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு வீரரிடமும் வெளிப்படவில்லை என்றும் கூறியுள்ளார் . இது அணியை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் என தனது வேதனையை தெரிவித்தார் .
மேலும் இதுகுறித்து பேசிய அவர் “இந்திய வீரர்கள் இந்திய அணிக்கு ஆடுவதைப் போல உத்வேகத்துடன் ஆடவில்லை ஒன்று அவர்களது உடல் மொழி மிகவும் சோர்வாக காணப்படுகிறது, இல்லையென்றால் அவர்கள் ஏதோ விரக்தியுடன் ஆடுவதைப் போல உள்ளது” என்றும் கூறினார்.
வீரர்களின் உடல் தகுதி பற்றி பேசிய அவர் “இது மிகவும் தீவிரமான ஒரு பிரச்சனை அணி நிர்வாகம் விரைவில் இதற்கான நடவடிக்கை எடுத்து அணியை சரியான பாதையில் வழி நடத்த வேண்டும் .அதிகமான வீரர்கள் காயங்களால் உடல் தகுதி இல்லாமல் இருப்பது அணி தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது” என்றும் கூறினார்.
சமீப காலமாகவே இந்திய வீரர்கள் அடிக்கடி காயத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ‘ஜஸ்பிரீத் பும்ரா’ மற்றும் ஆல் ரவுண்டர் ‘ரவீந்திர ஜடேஜா’ ஆகியோர் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை . இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில் ‘குலதீப் சென்’ மற்றும் தீபக் சஹார் ஆகியோர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி உள்ளனர். இதுகுறித்து நேற்று போட்டியின் முடிவில் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார் ரோகித் சர்மா .
இதனை மேற்கோள் காட்டி பேசிய மதன்லால் அணியின் கேப்டனை வருத்தத்தை தெரிவிக்கும் பொழுது அணியில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது. அது என்ன என்று ஆராய்ந்து அதனை சரி செய்ய வேண்டும் என்று கூறிய மதன்லால் வீரர்கள் அதிகமாக போட்டிகளில் ஆடுவதாக உணர்ந்தால் அவர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் .அதன் மூலம் காயங்களை தவிர்க்கலாம் மேலும் வீரர்களை அணியின் உடல் தகுதி பயிற்சியாளர் நல்ல முறையில் தயார்படுத்த வேண்டும் என்றும் கூறினார் .
இந்திய அணியின் தோல்வி குறித்து பேசியவர் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான் தோல்விக்கு முக்கிய காரணம் அவர்கள் கடந்த மூன்று வருடங்களாகவே சரியாக ஆடவில்லை கடந்த மூன்று வருடங்களில் இந்தியாவின் எத்தனை சதம் அடித்து இருக்கிறார்கள் என்று எனக்கு காட்டுங்கள் ?” என்று கேள்வியும் எழுப்பினார் .