நேற்று ஐபிஎல் தொடரில் காலிறுதிப் போட்டி போன்ற போட்டியில் ஆர்சிபி அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த நிலையில் கேப்டன்சி பொறுப்பில் ருதுராஜ் எடுக்கக்கூடிய தவறான முடிவு தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று விமர்சிக்கப்படுகிறது.
நடப்பு ஐபிஎல் தொடர் முழுக்க வேகப்பந்துவீச்சாளர்களை விட சுழல் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் ரன்கள் குறைவாக தருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. ஆனால் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் சிறந்த ஸ்பின்னர்களை அணியில் வைத்திருந்த போதும் கூட, அவர்களை சரியாகப் பயன்படுத்தாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்றைய ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு மிக சாதகமாக இருந்தது. சிஎஸ்கே அணியில் உலகத்தரம் வாய்ந்த இடதுகை சுழல் பந்துவீச்சாளர்கள் சான்ட்னர் மற்றும் ஜடேஜா என இருவர் இருந்தார்கள். இவர்கள் இருவருமே மிடில் ஓவர்களில் பயன்படுத்தி முழுவதுமாக பந்து வீச வைக்க முடியாது. எனவே சான்ட்னரை பவர் பிளேவில் ஆரம்பத்திலேயே கொண்டு வந்து, குறைந்தபட்சம் ஒரு ஓவராவது தந்து ஆடுகளத்தை கணிக்க வேண்டும்.
நேற்று ருதுராஜ் இந்த பெரிய தவறை செய்தார். முதல் மூன்று ஓவர்களை வேகப்பந்து வீச்சாளர்கள் வீச அதில் விக்கெட் இழப்பில்லாமல் 31 ரன்களை ஆர்சிபி அணி எடுத்தது. எனவே பவர் பிளேவுக்கு அடித்தளம் கிடைத்த காரணத்தினால், அடுத்த மூன்று ஓவர்கள் ரன் வராவிட்டால் கூட அவர்கள் அதை வைத்து தாக்குப் பிடித்தார்கள்.
இதற்கு அடுத்து நேற்றைய ஆடுகளத்தில் பந்தை மெதுவாக வீசக்கூடிய சுழல் பந்துவீச்சாளருக்கு அதிக உதவி இருந்தது. ஜடேஜா வழக்கமாக பந்தை கொஞ்சம் பிளாட்டாக வேகமாக வீசக்கூடியவர். எனவே நேற்று சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலும் அவருடைய பந்துவீச்சில் ரன் கசிந்தது.
இதையும் படிங்க : தோனியை மனசுக்குள்ள நினைச்சதுமே.. என் முடிவ மாத்திக்கிட்டேன்.. சான்ட்னர் கிட்ட சொன்னேன் – பாப் டு பிளேசிஸ் பேட்டி
ஜடேஜாவுக்கு இரண்டு ஓவர்கள் கொடுத்து ரன் சென்ற பின்னால், சான்ட்னர் போல மெதுவாக வீசக்கூடிய ரச்சின் ரவீந்தராவை ஒரு ஓவருக்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனால் அப்படி ஒரு யோசனையே ருதுராஜிடம் இல்லை. அவருக்கு சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் திறமை சரியாக இல்லை. ஆனால் ஆர் சி பி கேப்டன் மேக்ஸ்வெல்லை வைத்து மிகச் சரியாக இதைச் செயல்படுத்தினார். தற்பொழுது ரசிகர்கள் இது குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.