இந்திய கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்து மிகப் பிரபலமான ஒரு வீரர் உருவானார் என்றால் அது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான்.
அதே சமயத்தில் மிக வெற்றிகரமான வீரராக தன் துறையில் இருந்தவர் என்றால் அவருக்கு போட்டியே கிடையாது. இரண்டு உலகக் கோப்பைகள் ஒரு ஐசிசி கோப்பை என இனி வரக்கூடிய கேப்டன்கள் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டிய எல்லையை உருவாக்கி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று விட்டாலும், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ந்து கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இன்னும் கூடுதலாக ஒரு ஆண்டு விளையாடுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் தெரிகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று, அதிக கோப்பைகள் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது. கேப்டனாக அதிக கோப்பையை வென்ற ரோகித் சர்மாவின் சாதனையும் சமன் செய்யப்பட்டது.
இந்த நிலையில் மகேந்திர சிங் தோனிக்கு சென்னை அணியோடு மட்டும் அல்லாமல் சென்னையோடும் மனரீதியான நல்ல பிணைப்பு இருக்கிறது. தற்பொழுது அவர் சொந்தமாக படம் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து, எல் ஜி எம் என்று ஒரு தமிழ்ப் படத்தை தயாரித்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர் தீபக் சகர் பற்றி கூறும்பொழுது ” தீபக் சகர் ஒரு போதைப்பொருள் போன்றவர். அவர் நம் பக்கத்தில் இல்லாத பொழுது எங்கே போனார் என்று தோன்றும். அதே அவர் நம் அருகில் இருந்தால் இவர் ஏன் இங்கு இருக்கிறார் என்று தோன்றும்.
ஆனால் தீபக் தற்போது முதிர்ச்சி அடைந்து வருகிறார். அதற்கு நீண்ட காலமாகும். என் மகள் ஜீவா எட்டு வயதில் பெற்றுள்ள புத்திசாலித்தனத்தை அவர் 50 வயதில் பெற்று விடுவார்.
ஒயின் எப்படி நாளாக நாளாக சிறப்பு பெறும் என கூறுவார்களோ, அப்படித்தான் தீபக் சகரும். ஆனால் அந்த ஒயினை நான் குடிக்க முடியாது. தீபக் முதிர்ச்சி அடைவதற்குள் எனக்கு வயதாகிவிடும்.
எனது டெஸ்ட் அறிமுகம் சென்னையிலதான் நடந்தது. எனது டெஸ்ட் அதிகபட்சம் சென்னையில்தான் அடித்தேன். இப்போது எனது முதல் திரைப்பட தயாரிப்பு தமிழ் படம். அதன் வெளியீட்டு விழா சென்னையில் நடக்கிறது. சென்னை எனக்கு மிக நீண்ட சிறப்பு வாய்ந்தது. நான் நீண்ட காலத்திற்கு முன்பே இங்கு தத்தெடுக்கப்பட்டுவிட்டேன்” என்று கூறியிருக்கிறார்.