ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி உள்நாட்டில் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நாக்பூர் நகரில் நடைபெற்றது. நாக்பூரில் மழை பெய்து மைதானம் காயாமல் இருந்த காரணத்தால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு, போட்டி 8 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டது.
இந்தப் போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவது என்று தீர்மானித்தார். ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் முதல் ஆட்டத்தில் கலக்கிய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் இருவரும் அதிரடியாக விளையாட 8 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 90 எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மிகச் சிறப்பான துவக்கத்தை தந்தார். ஹேசில்வுட் வீசிய முதல் ஓவரில் அவர் இரண்டு சிக்சர்கள் விளாச, கேஎல் ராகுல் ஒரு சிக்சர் விலாச 20 ரன்கள் கிடைத்தது. இந்த துவக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட இந்திய அணி 4 பந்துகள் மீதம் வைத்து இலக்கை எட்டி அபாரமாக வென்று தொடரை சமன் செய்தது. அடுத்து தொடர் யாருக்கு என்று முடிவாகும் இறுதிப் போட்டி ஞாயிறன்று நாளை நடக்க இருக்கிறது.
இந்த போட்டியின் போது பெவிலியனில் ஓய்வு அறையில் அமர்ந்திருந்த விராட் கோலியை பார்த்து ஆர்சிபி ஆர்சிபி என ரசிகர்கள் கோஷம் எழுப்ப, விராட் கோலி தன் பனியனில் இருந்த பிசிசிஐ லோகோவை காட்டி நான் இப்போது இந்தியா என்று சூசகமாக தெரிவித்து, ” என்ன நீங்கள் ” என்பதுபோல கையால் சைகை காட்டி சலிப்பாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றார். இந்த ஒட்டுமொத்த நிகழ்வை அருகில் இருந்து பார்த்த ஹர்ஷல் படெல் சிரித்தபடி அமர்ந்திருந்தார்.
Virat Kohli showing Team India’s Jersey when fans chanting RCB, RCB at yesterday in Nagpur. This is precious reaction of King Kohli.pic.twitter.com/BBqZo4mSM2
— CricketMAN2 (@ImTanujSingh) September 24, 2022
நேற்றைய போட்டியில் கேஎல் ராகுல் ஆட்டம் இழந்ததும், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்ற அதிரடி ஆட்டக்காரர்களை களம் இறக்காமல் விராட் கோலியே களமிறக்கப்பட்டார். உள்ளே வந்த அவரும் உடனுக்குடன் இரண்டு பவுண்டரிகள் அடித்து அசத்தினார். ஆனால் மீண்டும் ஆடம் ஜாம்பாவின் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார். லெக் ஸ்பின் பந்து வீச்சில் விராட் கோலிக்கு இருக்கும் சிறிய தடுமாற்றம் நேற்றும் தொடர்ந்தது சற்று வருத்தமானதே.