அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் கடைசி ஆண்டாக இருக்கலாம். இதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.
இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஏல அணுகு முறையில் சில வித்தியாசமான மாறுதல்கள் வெளிப்பட்டது. ஆனால் அந்த மாறுதல்கள் மிகவும் ஆரோக்கியமானதாகவும் அறிவுபூர்வமாகவும் இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்பொழுதும் அனுபவ வீரர்கள் மீதும், ஆல் ரவுண்டர்கள் மீதும் முதலீடு செய்வதை தங்களுடைய அணுகுமுறையாக வைத்திருக்கிறது. அவர்களின் இந்த அணுகுமுறை மிகவும் வெற்றியடைந்த ஒரு அணுகுமுறையாகவும் இருக்கிறது.
ஆனால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் ஒரு அன் கேப்டு இந்திய வீரருக்கு 8.40 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறது. அதிலும் அவர் உள்நாட்டில் பெரிய அனுபவம் பெற்ற வீரராக இருக்கிறாரா என்றால் கிடையாது. அவருடைய வயது வெறும் 20தான்.
அந்த இளம்வீரர் பெயர் சமீர் ரிஸ்வி. வலதுகை பேட்ஸ்மேனான இவர் உத்தரப்பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் இந்த வருடம் நடைபெற்ற உத்தர பிரதேச t20 லீக்கில் மிகச் சிறப்பாக விளையாடி ஒரு அற்புதமான சதத்தை அடித்திருந்தார். மேலும் தமிழகத்தின் அபினவ் முகுந்த் வரை கவனத்தை ஈர்த்திருந்தார்.
இப்படி எல்லாம் இருந்தாலும் கூட வேறு ஏதாவது அணிகள் வாங்கலாம் என்று நினைத்திருந்த நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடாலடியாக இவர் மீது ஏலத்தில் இறங்கி, ஏலத்தில் மோதிய அணிகளை எல்லாம் நகர்த்தி, 8.40 கோடி ரூபாய்க்கு வாங்கி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.
இந்த நிலையில் இது குறித்து இளம் வீரர் சமீர் ரிஸ்வி கூறும் பொழுது ” எனக்கு முன் நான்கு வீரர்கள் விற்கப்படாமல் போனதால் நான் பயந்தேன். எனக்கு எந்த அணியும் கிடைக்காது என்று நம்பினேன். இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை ஏலத்தில் எடுத்தது.
எம்எஸ் தோனி பாய் என்னுடைய ஐடல். விரைவில் நான் அவரைச் சந்திக்க விரும்புகிறேன். நான் அவரை இதுவரை நேரில் சந்தித்தது இல்லை. அவர் என் முன்னால் வந்தால் நான் எப்படி நடந்து கொள்வேன் என்று எனக்குத் தெரியவில்லை!” என்று கூறி இருக்கிறார்!