இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ரவிச்சந்திரன் அஸ்வின் ஆட்டநாயகனாகவும் புஜாரா தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர். பங்களாதேஷ் நிர்ணயித்த இலக்கான 145 ரன்களை இந்திய அணி மிகவும் போராடியே வெற்றி பெற்றது.
ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் பொறுமையாகவும் பதட்டம் இல்லாமலும் ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்தத் தொடர் முழுவதுமே இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுல் மற்றும் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலி ஆகியோர் சரியாக ஆடவில்லை .
இதனால் இவர்கள் இருவரின் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் நேற்று இந்திய அணியின் பேட்டிங்கின் போது கே எல் ராகுல் மற்றும் புஜாரா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனையடுத்து நான்காவது இடத்தில் விராட் கோலிக்கு பதிலாக அக்க்ஷர் பட்டேல் களம் இறக்கப்பட்டார். இது தொடர்பாக கிரிக்கெட் விமர்சகர்கள் பல்வேறு விமர்சனங்களை வைத்திருந்தனர் .
இதனைப் பற்றி கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா “விராட் கோலி போன்ற ஒரு உலகத்தரமான பேட்ஸ்மேன் அணியில் இருக்கும் போது அவருக்கு முன்னதாக வேறொரு வீரரை ஆடுகளத்தில் இறக்கியது சரியான அணுகுமுறை இல்லை. மேலும் அது ஆட்டத்தின் முக்கியமான ஒரு நேரம், ஒருவேளை விராட் கோலி கேட்டுக் கொண்டிருந்தால் அவருக்கு பதிலாக அக்க்ஷர் பட்டேலை இறக்கி இருக்கலாம். ஆனால் அணி நிர்வாகமானது அப்படி ஒரு முடிவை எடுத்தது சரியல்ல” என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் லெஜெண்ட் சுனில் கவாஸ்கர் ” ஒரு இடது கை ஆட்டக்காரரை அந்த இடத்தில் களம் இறக்கவேண்டியது சரி தான் என்ற பட்சத்தில் ரிசப் பண்ட் ஒரு இடது கை ஆட்டக்காரர் தானே. அவரை இறக்காமல் ஏன் அக்சர் பட்டேலை களம் இறக்கினார்கள் என்று புரியவில்லை. ஒருவேளை ரிசப் பண்ட் களமிறங்கி இருந்தால் ஆட்டத்தின் சூழ்நிலையை அவர் மாற்றிருக்க கூடும் என்று கூறியிருந்தார்.
இன்று இந்திய அணியின் வெற்றிக்கு பின் இதே கேள்வியை அஜய் ஜடேஜா புஜாராவிடம் கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த புஜாரா ” அக்க்ஷர் பட்டேலை அந்த இடத்தில் களம் இறக்கியது எங்கள் அணி நிர்வாகத்தின் பார்வையிலிருந்து ஒரு சரியான முடிவு தான். ஏனென்றால் பங்களாதேஷின் பிரதான பந்துவீச்சாளர்கள் இருவரும் இடது கை பந்துவீச்சாளர்கள். அதனால் ஒரு இடது கை பேட்ஸ்மேன் களத்தில் இருந்தால் சரியாக இருக்கும் என்ற வியூகத்துடன் நாங்கள் அக்சர் பட்டேலை களம் இறக்கினோம். மேலும் அந்த இடத்தில் விக்கெட்டுகளை விட்டுக் கொடுக்காமல் விரைவான ரன் எடுக்கும் முயற்சியும் இருக்க வேண்டும் என்பதால் அக்சர் பட்டேலை, விராட் கோலிக்கு முன்பாக களம் இறக்கினோம் என்று பதிலளித்துள்ளார்.
இந்தப் போட்டியில் அக்க்ஷர் பட்டேல் சிறப்பாக ஆடி 34 ரன்கள் எடுத்தார், என்பது குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சாளர்களுக்கு முற்றிலும் சாதகமாக மாறியிருந்த ஆடுகளத்தில் அவர் அடித்து அந்த 34 ரன்கள் மிகவும் முக்கியமானது. அது இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று கூட கூறலாம்.