இன்னும் சில நாட்களில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் தொடங்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் 15 பேர் கொண்ட டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத ரிங்கு சிங் அதைப்பற்றி பேசி இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக அவர் பினிஷிங் ரோலில் எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் விளையாடி இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளிலும் வாய்ப்பு பெற்றார். இதைத்தொடர்ந்து இந்திய டி20 அணியில் கிடைத்த 15 வாய்ப்புகளில் மிகச் சிறப்பான பேட்டிங்கை பினிஷிங் ரோலில் வெளிப்படுத்தினார்.
எனவே அவருக்கு நிச்சயம் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இன்டிஸ் சூழ்நிலைகளில் விளையாட நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் தேவை எனக் கருதிய இந்திய தேர்வுக்குழு ரிங்கு சிங்கை சேர்க்காமல் விலக்கி வைத்தது.
இதுகுறித்து ரிங்கு சிங் கூறும் பொழுது “நல்ல செயல் திறனோடு இருந்தும் கூட நீங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றால் அது யாருக்கும் வருத்தத்தை உண்டாக்கக் கூடியதாகத்தான் இருக்கும். ஆனால் இந்த மாதிரி டீம் காம்பினேஷன் காரணமாக என்னை அவர்கள் தேர்வு செய்யவில்லை. ஆனாலும் பரவாயில்லை நம் கையில் இல்லாத விஷயங்கள் குறித்து நாம் எப்பொழுதும் கவலைப்பட கூடாது.
ஆரம்பத்தில் இது குறித்து எனக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது உண்மைதான். ஆனாலும் எது நடந்தாலும் பரவாயில்லை அது நன்மைக்கேதான் நடக்கும். ரோகித் பாய் என்னிடம் சிறப்பாக எதுவும் சொல்லவில்லை. அடுத்த இரண்டு வருடங்களில் இன்னொரு உலகக் கோப்பை இருக்கிறது, எனவே அதை நோக்கி கடுமையாக உழைத்து தயாராகும்படி மட்டும் கூறினார்.
இதையும் படிங்க : ஆர்சிபி-ல் கோலி எனக்கு இதை செய்தார்.. அவர்தான் இந்த விஷயத்தில் பயிற்சி குடுத்தார் – வில் ஜேக்ஸ் பேட்டி
ரோகித் பாய் கேப்டன்சி எவ்வளவு சிறந்தது என உலகம் பார்த்திருக்கிறது. அவருடன் என்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் பேசினால் நான் ஒரே ஒரு தொடரில் மட்டுமே விளையாடி இருக்கிறேன். அவருடன் நான் அதிகம் பேசியது கூட கிடையாது. அவருடைய தேவை இளைஞர்கள் நன்றாக விளையாட வேண்டும். அவர் எப்பொழுதும் இளம் வீரர்களிடம் நன்றாக விளையாடுங்கள் என்றுதான் கூறுவார்” என்று தெரிவித்திருக்கிறார்.