தற்போது ஐபிஎல் தொடரை ஒட்டி இம்பேக்ட் பிளேயர் விதி வேண்டுமா வேண்டாமா? என்பது மிகப்பெரிய விவாதமாக சென்று கொண்டிருக்கிறது. தற்பொழுது இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.
அதே சமயத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே இம்பேக்ட் பிளேயர் விதி ஐபிஎல் தொடரில் இருக்கக் கூடாது என்று கருதுகிறார்கள். இதன் காரணமாக உண்மையான அசல் கிரிக்கெட் வடிவம் பாதிப்படைகிறது என்றும், மேலும் இம்பேக்ட் பிளேயர் விதியால் ஆல்ரவுண்டர்கள் உருவாவது தடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார்கள்.
வீரர்கள் மேல்தான் தவறு
இந்த நிலையில் இம்பேக்ட் பிளேயர் விதியை ஆதரித்து பேசிய அஸ்வின் கூறும் பொழுது ” இம்பேக்ட் பிளேயர் விதி ஏன் மிக மோசமானது கிடையாது என்று நான் நினைக்கிறேன் என்றால், இந்த விதியால் நீங்கள் ஆட்டத்தின் வியூகத்தில் இன்னும் கொஞ்சம் மாற்றங்களை உருவாக்க முடியும். அதே சமயத்தில் இந்த விதியால் ஆல்ரவுண்டர்களை உருவாக்க முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால் ஆல் ரவுண்டர்களாக உருவாக வேண்டும் என்று நினைப்பவர்களை இந்த விதி தடுப்பதில்லை”
“இந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை எடுத்துக் கொண்டால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. அதே சமயத்தில் ஆல்ரவுண்டர்களாக இருப்பவர்கள் இந்த விதியால் சோர்வடைவதும் கிடையாது. வெங்கடேஷ் ஐயரை எடுத்துக் கொண்டால் ஆல் ரவுண்டராக கவுண்டி கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டு வருகிறார். இது ஒரு புதுமைக்கான வாய்ப்பு. மேலும் விளையாட்டை இது சிறந்ததாக்குகிறது”
ஷாபாஷ் அகமதை பாருங்கள்
“ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் ஷாபாஷ் அகமதை ஹைதராபாத் அணி இம்பாக்ட் பிளேயராக கொண்டு வந்தது. அவர் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி அந்த அணி 179 ரன்கள் எடுத்தது. பிறகு அவர் பவுலிங்கில் 23 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் எடுத்து மேட்ச் வின்னர் ஆக மாறினார்”
“போட்டியில் பனிப்பொழிவு வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் நிலையில் இருக்கும்பொழுது, இம்பேக்ட் பிளேயர் விதியால் நீங்கள் முதலில் வந்து வீசும் பொழுது ஒரு பவுலரை கொண்டு வரலாம், நீங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்யும்பொழுது ஒரு பேட்ஸ்மேனை கூடுதலாக கொண்டு வரலாம். இப்படி உங்களுடைய திட்டத்தில் நிறைய மாற்றங்களை செய்ய முடியும்”
இதையும் படிங்க : 152 ரன்.. ரிங்கு சிங் சென்சிபிள் கேப்டன் இன்னிங்ஸ்.. சிஎஸ்கே சமீர் ரிஸ்வி அணி தோல்வி.. உபி டி20 லீக்
“ஷாபாஷ் அகமது, சிவம் துபே மற்றும் துருவ் ஜுரல் ஆகிய வீரர்கள் இம்பேக்ட் பிளேயர் விதி இருந்த காரணத்தினால்தான் வந்தார்கள். இந்த விதி இல்லை என்றால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. இதனால் நிறைய வீரர்கள் உருவானார்கள். இதுதான் ஒரே வழி என்று நான் கூறவில்லை. ஆனால் இந்த விதி அவ்வளவு மோசமானதாக இல்லை என்று கூறுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.