2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவடைந்து வெளியேறினார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு ஒரு பெரிய அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மேற்கொண்டு விண்ணப்பிக்காத ராகுல் டிராவிட் தன்னுடைய மகன்களை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள விரும்புவதாக கூறியிருந்தார். தற்பொழுது ஐபிஎல் அணிக்கு தலைமை பயிற்சியாளராக வர முடிவு செய்துவிட்டார். இது இரண்டு மாத வேலை என்பதால் அவருக்கு பெரிய அளவில் பணிச்சுமை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் ராகுல் டிராவிட்
2008 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ராகுல் டிராவிட் அடையாள வீரராக பங்கு பெற்று விளையாடினார். இந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் மீண்டும் மூன்றாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விளையாடினார்.
இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு மற்றும் 2015 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வழிகாட்டியாகவும் இருந்திருக்கிறார். மேற்கொண்டு இந்திய அண்டர் 19 அணிக்கு 2015 ஆம் ஆண்டு பயிற்சியாளர் பொறுப்புக்கு சென்று விட்டார். 2021ஆம் ஆண்டு வரையில் இந்திய அண்டர் 19 மற்றும் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். பிறகு 2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வந்து 2024 ஆம் ஆண்டு வெளியேறிவிட்டார்.
புதிய பயிற்சியாளர் பொறுப்பு
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்கின்ற அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகியிருக்கிறது. அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடன் இணைவார் என்றாலும், இந்த ஆண்டு நடைபெறும் மெகா ஏலத்தில் அவருடைய பங்களிப்பு இருக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறும் பொழுது ” பல ஆண்டுகளாக நான் ஹோம் என்று அழைத்த அணிக்கு பயிற்சியாளராக திரும்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகக் கோப்பைக்குப் பிறகு சிறந்த சவாலை சந்திப்பதற்கான சரியான நேரம் இதுவென்று நினைக்கிறேன். இதைச் செய்வதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் சரியான இடமாக இருக்கும்.
இதையும் படிங்க : 187 ரன் பின்னிலை… சாதனை முஷீர் கான் ஏமாற்றிய கில்.. பிரேக் போட்ட பராக் கேஎல் ராகுல் – துலீப் டிராபி 2024
மனோஜ், ஜாக் மற்றும் சங்கக்கரா ஆகியோரது கடின உழைப்பும் அர்ப்பணிப்போம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சில ஆண்டுகளாக நல்ல நிலைக்கு கொண்டு சென்று இருக்கிறது. இந்த அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எங்களிடம் நல்ல வளமும் திறமையும் இருக்கிறது. பணியை தொடங்க ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.