பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அப்பாஸ் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து மிகவும் வெளிப்படையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் தேசிய அணி மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக பாகிஸ்தானின் உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு மிகவும் பலவீனமாக இருப்பது அமைந்திருக்கிறது. இதில் கவனம் செலுத்த வேண்டும் என பல பாகிஸ்தான் வீரர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்
இது குறித்து பேசி இருக்கும் முகமது அப்பாஸ் கூறும் பொழுது ” இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் நான்கு நாள் போட்டிகள், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் மற்றும் 100 பந்து தொடர் நடத்தப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். செப்டம்பர் 30ஆம் தேதி சீசன் முடிவடைந்ததும் அடுத்த சீசன் அட்டவணையை அறிவிப்பதற்கு வெறும் 15 நாட்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள்”
“பெரும்பாலும் நவம்பர் மாதம் மத்தியில் அல்லது நவம்பர் மாதம் இறுதிக்குள் அடுத்த சீசனுக்கான அட்டவணை வெளியிடப்படும். இங்கிலாந்தின் எவ்வளவு பெரிய முக்கிய நிகழ்வுகள் இருந்தாலும் கூட, கவுன்டி கிரிக்கெட்டின் அட்டவணைகள் மாறாமல் உடனுக்குடன் வெளியில் வரும்”
நல்ல உணவு சம்பளம் மைதானம் கிடைக்கும்
மேலும் பேசிய முகமது அப்பாஸ் கூறும் பொழுது “உணவு, உடை, போட்டி கட்டணம், சம்பளம் மற்றும் மைதானம் என எல்லாம் மிகச் சிறப்பாக கையாளப்பட்டு வீரர்களுக்கு கிடைக்கும். எல்லாமே சரியான நேரத்தில் செய்யப்படும். பாகிஸ்தானின் உள்நாட்டு கிரிக்கெட்டின் முன்னேற்றத்திற்காக இவை எல்லாமே செய்யப்பட வேண்டும்”
இதையும் படிங்க : 536/9.. இந்திய வீரர்கள் அணிக்கு.. சவால் விடும் ரகானேவின் மும்பை மாநில அணி.. சர்பராஸ் கான் அசத்தல்
“பாகிஸ்தானில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நன்மை அளிக்கும் வகையில் வீரர்களுக்கான ஒரு தனிச்சங்கம் இருக்க வேண்டும். ஏனென்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எல்லாவற்றையும் நிர்வகிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இதுவே வீரர்களுக்கான சங்கம் இருந்தால் அதில் வீரர்களுக்கான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வுகள் காணப்பட உதவும்” என்று கூறியிருக்கிறார்.