தற்போது பாகிஸ்தான் நாட்டில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் சிறப்பான பேட்டிங்கால் அந்த அணியை கரை சேர்த்து இருக்கிறார்.
இந்த முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியில் பிரதான சுழல் பந்துவீச்சாளர் யாரும் இல்லை. மேலும் 15 பேர் கொண்ட அணியிலும் பிரதான சுழல் பந்துவீச்சாளர் இல்லை. 28 வருடங்கள் கழித்து உள்நாட்டில் பாகிஸ்தான் அணி பிரதான சுழல் பந்துவீச்சாளர் இல்லாமல் டெஸ்ட் போட்டியை விளையாடுவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி மீது பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விமர்சனங்கள் வைத்தார்கள்.
பயிற்சியாளரை காப்பாற்றிய சவுத் ஷகில் – முகமது ரிஸ்வான்
இந்த நிலையில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி பாபர் அசாம் மற்றும் கேப்டன் ஷான் மசூத் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை 16 ரன்கள் இழந்து சிக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக மோசமாக சரிந்தால் கடுமையான விமர்சனங்களை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் சந்திக்க வேண்டி இருந்திருக்கும்.
இப்படியான நிலையில் போட்டியின் இரண்டாவது நாளான இன்று துணை கேப்டன் சவுத் ஷகில் 261 பந்தில் 141 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவருடன் இணைந்து அதிரடியாக விளையாடிய முகமது ரிஸ்வான் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 239 பந்துகளில் 171 ரன்கள் குவித்து களத்தில் நின்றார். பாகிஸ்தான அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்திருந்தது.
பாகிஸ்தான் கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் முடிவு
இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் முதல் இன்னிங்ஸை டிக்லர் செய்வதாக அறிவித்தார். முகமது ரிஸ்வான் வேகமாக விளையாடி இரட்டை சதம் அடிப்பார் என ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து இருந்தார்கள். இப்படியான நிலையில் இது எல்லோருக்கும் கடுமையான ஏமாற்றமாக அமைந்தது.
பாகிஸ்தான் அணிக்காக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 1980 ஆம் ஆண்டு விக்கெட் கீப்பர் தஸ்லீம் ஆரிப் 210 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்திருந்தார். 1955 ஆம் ஆண்டு பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் இம்தியாஸ் அஹமத் நியூசிலாந்து அணிக்கு எதிராக 209 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு அடுத்து பாகிஸ்தான் விக்கெட் கீப்பராக டெஸ்ட் கிரிக்கெட்டில் முகமது ரிஸ்வான் தற்போது எடுத்த 171* ரன்கள் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கொஞ்சம் அனுமதித்திருந்தால் முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக சாதனை படைக்க அதிக வாய்ப்பு இருந்தது.
இதையும் படிங்க : உலக கோப்பைல 15 தடவ டிராவிஸ் ஹெட்டுக்கு இது நடந்துச்சு.. கப் ஜெயிக்கணும்னா திறமையோட இதுவும் அவசியம் – ராகுல் டிராவிட் பேட்டி
ஆனால் முதல் டெஸ்ட் முதல் நாளில் மழையின் காரணமாக நிறைய நேரம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக போட்டியை வெல்ல வேண்டி பாகிஸ்தான் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இப்படியான ஒரு முடிவுக்கு வரவேண்டியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது!